உள்ளூர் செய்திகள்

இருவரும் ஒன்றே....!

காய்கறி வாங்கிக் கொண்டு, மார்க்கெட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வினோதினி, எதிரில், பேங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள்.''என்னப்பா... நல்லா இருக்கியா... பார்த்து ரொம்ப நாளாச்சு. நானும் பேங்குக்கு போகணும்ன்னு அவர்கிட்டே சொல்லிட்டு இருக்கேன். நேரம் கிடைக்கல.''''போன வாரம் கூட சார் பேங்க்கு வந்திருந்தாரே மேடம்... டெபாசிட் பணம் அஞ்சு லட்சத்த, ஏதோ அவசரத் தேவைன்னு, மானேஜர்கிட்ட பேசி, வாங்கிட்டுப் போனாரு. நான்தான் அவரு கூட இருந்தேன்.''ஒரு கணம் துணுக்குற்றவள், ''ம்... ஆமாம் சொன்னாரு; நான் தான் மறந்துட்டேன். சரிப்பா அடுத்த வாரம் பேங்குக்கு வரேன்; வரட்டுமா... வேலை இருக்கு,'' என்று கூறி, அவனிடம், விடைபெற்றாள் வினோதினி.'வினோ... நம்ம மக பேருல, சேமிப்பு பணத்த, டெபாசிட் பண்ணிடுவோம். சேவிங்க்ஸ் அக்கவுன்டில் இருந்தா, தேவைப்படும் போது எடுக்கிற மாதிரி இருக்கும். அஞ்சு வருஷத்துக்கு பிக்ஸட் டெபாசிட்டில் போட்டா, அவ காலேஜ் படிப்புக்கு உதவியா இருக்கும். என்ன சொல்ற...' என்று கேட்ட கணவன் சங்கரிடம், 'நீங்க சொல்றது நல்ல யோசனையாத்தான் இருக்கு; அப்படியே செய்திருவோம்...' என்றாள் வினோதினி.பிசினசில் கிடைத்த லாப பணத்தை, போன வருடம் தான், மகள் பெயரில் டெபாசிட் செய்திருந்தனர். 'அதை எடுத்திருக்கார்ன்னா, அப்படி என்ன தேவை... அதுவும் என்னிடம் கூட சொல்லாமல்...' என்று நினைத்த வினோதினி, புரியாமல் தவித்தாள்.''வினோ, உனக்கு விஷயம் தெரியுமா.... நம்ப அனுவுக்கு, அமெரிக்கா வரன் பார்த்துட்டு இருக்காங்கன்னு சொன்னேன் இல்லையா... அது முடிவாகிடுச்சாம். அப்பா போன் செய்து சொன்னார். பணம், நகை சீர் வரிசைன்னு அதிகம் செலவாகுமேன்னு முதல்ல அப்பா யோசிச்சாராம். ஆனா, நல்ல இடமா இருக்குறதுனால, கூட குறைச்சு ஆனாலும் பரவாயில்ல, எப்படியாவது சமாளிச்சுடலாம்ன்னு பேசி முடிச்சுட்டாங்களாம். அடுத்த மாசம் நிச்சயம் பண்றாங்க; அப்பா சொன்னாரு,'' என்றான் சங்கர்.இப்போது தான் வினோதினிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது. தங்கை கல்யாணத்திற்காக தான், அஞ்சு லட்சத்த எடுத்திருக்கிறார். இருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், அவ்வளவு பெரிய தொகையை தூக்கிக் கொடுத்திருப்பதை, அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.''நல்ல விஷயம் தான்; பணம் நிறைய செலவாகும் போலிருக்கே... கல்யாண செலவுக்கு மாமா பணம் வச்சிருக்காரா?''''என்ன இப்படி கேட்டுட்டே... அனு கல்யாணத்துக்காக, அப்பா ரொம்ப வருஷமா பணம் சேர்த்துட்டு வர்றாரு. நல்லா தடபுடலா சிறப்பா செய்வாரு பாரேன்.'கணவனைக் கூர்ந்து பார்த்தவள், ''நாம ஏதாவது பணம் கொடுக்கணுமா?'' என்று, கேட்டாள்.''ம்கூம்... அப்பா நிச்சயம் வாங்க மாட்டாரு. மாசச் செலவுக்கு பணம் கொடுத்தாக் கூட, 'வேணாம் சங்கர், என்கிட்ட தேவையான அளவு பணம் இருக்கு. எல்லா விஷயத்தையும் ப்ளான் பண்ணிச் செய்யறதால, பண விஷயத்தில தட்டுப்பாடு வர்றதில்ல. நீ கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கிறே. உன் குடும்பத்துக்கு சேத்து வை'ன்னு சொல்வாரு. நாமளா பிரியப்பட்டு, அனுவுக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அனுவுக்கு ஒரு ப்ரேஸ்லெட்டும், பட்டுப்புடவையும் எடுத்துக் கொடுத்திருவோமா,'' என்றான்.மவுனமாக இருந்தாள் வினோதினி. 'எனக்குத் தெரியாம, உங்க அப்பாகிட்ட பணத்த தூக்கி கொடுத்ததுமில்லாம, நாடகமா நடிக்கிறீங்க... இருக்கட்டும். உங்க வாயாலேயே உண்மையை வரவழைக்கறேன்...' என்று, நினைத்துக் கொண்டாள்.நிச்சயதார்த்த வீடு கலகலப்பாக காட்சியளித்தது. வினோதினியின் பெற்றோர், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்திருந்தனர்.மாமனார், மாமியார் தங்குவதற்கு ஓட்டல் ரூம் ஏற்பாடு செய்திருந்தான் சங்கர்.வினோதினியிடம் நகைகளைக் காண்பித்த மாமியார், சங்கர் பணம் கொடுத்ததைப் பத்தி வாயத் திறக்காமல் இருந்தது, வேண்டுமென்று அவர்கள், அவளிடம் மறைக்கின்றனர் என்பது, புரிந்தது.''வினோ, அனுவுக்கு வாங்கின நகைக நல்லா இருக்கா பாரு...'' என்று கேட்டு, ''இப்ப இருக்ற விலைவாசியிலே இதையெல்லாம் வாங்க முடியுமா... ஆரம்பத்திலிருந்து இரண்டும், மூணுமாக பவுன் வாங்கினது நல்லதாப் போச்சு. உங்க மாமா எதிலயும் முன் ஜாக்கிரதை தான். அனு பேருல, பேங்க்ல போட்டு வச்சிருந்த அஞ்சு லட்ச ரூபா, இப்ப சீர் சாமானுங்க வாங்கறதுக்கும், கல்யாணச் செலவுக்கும் பயன்பட்டுக்கிட்டு இருக்கு. 'பணம் எதுவும் தேவைப்படுதாப்பா'ன்னு சங்கர் கூட கேட்டான். 'தாராளமாக பணம் இருக்கு; வேணாம்'ன்னு சொல்லிட்டோம்,'' என்றாள்'அவர் தான் என்கிட்ட மறைக்கிறார்ன்னா, எல்லாரும் சேர்ந்துக்கிட்டு சொல்லி வைத்தாற் போலவா பேசுறீங்க...' என்று, வினோதினிக்கு மாமியார் மீது எரிச்சல் வந்தது.''சரி வினோ... உங்க அம்மா, அப்பா ஓட்டல்ல தங்கியிருக்காங்க. அவங்க மண்டபம் வர்றதுக்கு, சங்கர்கிட்ட சொல்லி, கார் அனுப்ப சொல்லிரு.''எல்லாம் அவர் கொடுத்த அஞ்சு லட்ச ரூபா வேலை செய்யுது. சம்பந்தி மேல் என்ன கரிசனம்...' என்று, நினைத்து கொண்டாள் வினோதினி.அந்த நேரம் அங்கு வந்த அனு, ''அண்ணி, இந்தப் புடவய பாருங்க... நிச்சயத்துக்குப் புடவ எடுக்கிறப்ப, அப்பா உங்களுக்கும் சேர்த்து எடுத்தாரு, நல்லாயிருக்கா... புடவ உங்களுக்குப் பிடிச்சிருக்கா.'அனு, தன் கையிலிருந்த, மெரூன் கலரில், கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவையை காட்டினாள்.''நல்லா இருக்கு. எனக்கு எதுக்கு பட்டுப்புடவ? கல்யாண பொண்ணு உனக்கு எடுத்தா பத்தாதா... எதுக்கு தேவையில்லாத செலவு,'' என்றாள்.''என்ன அண்ணி அப்படிச் சொல்லிட்டிங்க... இந்த வீட்டுக்கு ஒரே மருமக நீங்க. உங்களுக்குச் செய்யறது செலவாகிடுமா... கல்யாணத்துக்கு என் மருமகளுக்கு, ஏதாவது நகை வாங்கணும்ன்னு அப்பா சொல்லிட்டிருக்காரு தெரியுமா...'' என்றாள்.இவர்கள் காட்டும் அன்புக்கும், கரிசனத்துக்கும் காரணம், தன் கணவன் கொடுத்த பணம்தான் என்று நினைத்து, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.நிச்சயதார்த்த விழா நல்லபடியாக முடிய, வந்த விருந்தினர்கள் விடை பெற்றுச் சென்றபின், தன் அம்மாவிடம் வந்தாள் வினோதினி.''அம்மா உன்னோடு உட்காந்து பேசவே நேரமில்ல. வந்தவங்களை கவனிக்கவே நேரம் சரியா இருந்தது. அப்புறம்... தம்பி எப்படி இருக்கான், நல்லா படிக்கிறானா?'' என்று கேட்டாள்.''ம்... நல்லா படிக்கிறான்; இரண்டு நாளா ஓட்டல்ல சாப்பிட்டுட்டு காலேஜ் போயிருப்பான். நாங்களும் கிளம்பணும்; அப்பா பிசினஸ் விஷயமாக பெங்களூரு போகணும்ன்னு சொன்னாரு. உன் மாமியார் உன்னப் பத்தி பெருமையாகச் சொன்னாங்க வினோ, மனசுக்கு சந்தோஷமாக இருந்துச்சு.'அதற்குள் அங்கு வந்த வினோதினியின் மாமியார், ''வினோ, உள்ளே ஸ்வீட் பாக்கெட், பழங்கள் எல்லாம் நிறைய இருக்கு. அம்மாகிட்ட கொஞ்சம் கொண்டு வந்து கொடும்மா,'' என்றவள், வினோதினியின் அம்மாவிடம், ''சம்பந்தியம்மா, கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலயே வந்து, நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்,'' என்றாள்.''அது எங்க கடமை சம்பந்தியம்மா. கட்டாயம் வர்றோம், இது எங்கவீட்டுக் கல்யாணம்ல்ல.''ஸ்வீட் பாக்கெட்டுகளையும், பழங்களையும் அம்மாவிடம் கொடுத்த வினோதினி, ''அப்பா எங்கேம்மா,'' என்று கேட்க, ''மாப்பிள்ளையோட மாடியில பேசிட்டிருக்காரும்மா. இனி ஓட்டல் ரூம காலி பண்ணிட்டுக் கிளம்பணும். நேரமாச்சு நீ போய் அப்பாவக் கூட்டிட்டு வா.''மாடி ஏறியவள், அவர்கள் பேசுவதில், தன் பெயர் அடிபட, அங்கேயே தயங்கி நின்றாள்.''மாமா, உங்கள நான், என் அப்பா ஸ்தானத்தில தான் வச்சிருக்கேன். நீங்க ஏன் இதை பெரிய விஷயமாக நினைக்கிறீங்க... பிசுனசில் பணத் தட்டுப்பாடு வர்றது சகஜம் தானே! உங்ககிட்ட கையில ரொக்கமாக பணமில்லன்னு தானே, நான் பாங்கில் டெபாசிட் பண்ணின பணத்த எடுத்துக் கொடுத்தேன். இப்ப எனக்கு பணம் தேவையில்ல. உங்க பிசினஸ் நல்லபடியாக சகஜ நிலைக்கு வந்ததும், மெதுவா திருப்பித்தாங்க; அவசரமில்ல. என் அப்பாவுக்கு ஒரு கஷ்டம்ன்னா, நான் பார்த்துட்டு இருப்பேனா... அது மாதிரிதான் நீங்களும். ஒண்ணும் நினைக்க வேண்டாம் மாமா, எந்த டென்ஷனும் இல்லாம உங்க பிசினசை நல்லபடியா பாருங்க,'' என்றான் சங்கர். ''மாப்பிள்ளை, இது உங்க பெருந்தன்மையக் காட்டுது. பணம் கொடுத்து உதவினதுமில்லாம, இந்த விஷயம் வினோதினிக்குத் தெரிஞ்சா, அப்பா பிசினசில் நஷ்டப்பட்டு சிரமப்படறாரேன்னு நினைச்சு, கஷ்டப்படுவான்னு சொல்ல வேணாம்ன்டீங்க. எனக்கென்னவோ வினோதினிக்கு இந்த விஷயத்த சொல்லிடறது தான், நல்லதுன்னு தோணுது.'''வேணாம் மாமா, எதுக்கு அவகிட்ட இதப்போயி சொல்லிக்கிட்டு. அவளப் பொறுத்தவரை, இது தெரிஞ்சு பெரிசா ஒண்ணும் ஆகப் போறதில்ல. அவ என்னைக்குமே கொடுக்குறத தடுக்கிறவ கிடையாது. இப்ப என் தங்கச்சி கல்யாணத்துக்கு கூட, ஏதும் பணம் கொடுக்கணுமான்னுதான் கேட்டா. அவளுக்கு நல்ல மனசு; எங்க அப்பா, அம்மாவ, பெத்தவங்க ஸ்தானத்தில் வச்சு வினோதினி அன்பா பழகுறா... நானும் உங்களை அதே நிலையில் தான் வச்சுப் பாக்றேன். எங்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்ல; எங்க ரெண்டு பேருக்கும் பெத்தவங்க நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். சரி மாமா, நேரமாச்சு, கீழே நம்மைத் தேடுவாங்க. வாங்க போகலாம்,'' என்றான் சங்கர்.தன் மேல் கணவனும், அவன் குடும்பத்தினரும் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயத்திற்கு, தான் சிறிதும் தகுதியில்லாமல் இருப்பதை உணர்ந்து, வெட்கப்பட்டவளாக, வந்த சுவடு தெரியாமல் கீழே இறங்கிச் சென்றாள்.பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !