உள்ளூர் செய்திகள்

சென்னை குற்றாலம் ஒரு ரீமேக்!

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை, சிறுவர் முதல் பெரியவர் வரை ஆரவாரத்தோடு, தினமும் மகிழ்விக்கும் கிஷ்கிந்தாவில், 'சென்னை குற்றாலம்' ரீ - மேக் செய்யப்பட்டுள்ளது. கிஷ்கிந்தா, பொழுதுபோக்கு பூங்காவின், ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் ஜோஸ் அப்பச்சன், 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, அளித்த பேட்டி:இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கேளிக்கை பூங்கா, சென்னை கிஷ்கிந்தா தான். என் அப்பாவுடன் நானும், என் அண்ணனும் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு, 'டிஸ்னிலேண்ட்' சென்று பார்த்தோம். அப்போது தான், எங்களுக்கு, அது போன்று ஒரு கேளிக்கை பூங்காவை, சென்னையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி உருவானது தான், தாம்பரத்திற்கு மேற்கே, 4 கிலோமீட்டர் தூரத்தில், அமைந்துள்ள கிஷ்கிந்தா. கடந்த, ஆக.,14,1995ல் கிஷ்கிந்தா, பொது மக்களுக்காக திறக்கப்பட்டது.இந்தியாவிலேயே, செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் பெரிய நீர்வீழ்ச்சி, சென்னை குற்றலாம் தான்! ஒரிஜினல் குற்றாலத்தில் அனுபவிக்கும், 'த்ரில்'லை, மகிழ்ச்சியை, சென்னையிலேயே பெற முடியும் என்றால், மக்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவர் என்ற எண்ணம் தான், இந்த நீர்வீழ்ச்சி உருவாக காரணம்.சென்னை குற்றாலம் நீர்வீழ்ச்சி, 60 அடி உயரமும், 52 அடி அகலமும் கொண்டது. இந்த நீர்வீழ்ச்சியில், ஒரு மணி நேரத்தில் கொட்டுகிற, தண்ணீரின் அளவு, இருபது லட்சம் லிட்டர்கள். இவ்வளவு தண்ணீர் எப்படி கிடைக்கிறது என்று, பலரும் வியக்கலாம். 1995க்கு முன்பாகவே, மழை நீர் சேகரிப்பை, இங்கு செயல்படுத்தி வருகிறோம். கிஷ்கிந்தாவிற்குள், நாங்கள் உருவாக்கியுள்ள நான்கு பெரிய ஏரிகளிலிருந்து தான், கிஷ்கிந்தா குற்றாலத்திற்கும், நீச்சல் குளத்திற்கும், மற்ற உபயோகத்திற்கும், தண்ணீர் வருகிறது. தண்ணீரை சுத்தம் செய்ய, 'வாட்டர் ட்ரீட்மென்ட் ப்ளான்ட்' செயல்படுகிறது. வலுவான அஸ்திவாரத்தில், 55 அடி உயரமுள்ள கட்டடத்தை கட்டி, அதன்பின், மூன்று பக்கங்களிலும், மண்ணால் மூடினோம். ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள, மலைப்பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பெரிய பாறைகளை வார்ப்பு எடுத்து வந்து, அந்த வார்ப்புகளில், கான்கிரீட் கலவையை வைத்து, உண்மையான பாறைகளை தயார் செய்தோம். அந்த கனமான பாறைகளை, நீர்வீழ்ச்சியின் பல்வேறு மட்டங்களில் வைக்க வேண்டும். அதனால், கப்பல் துறையில் அனுபவம் உள்ள வலுவான, திடகாத்திரமான இருபது ஆட்களை கேரளாவில் இருந்து, பிரத்யேகமாக, அழைத்து வந்து, இந்த பணியில் ஈடுபடுத்தினோம். பெரிய இரும்பு பிரேம்களில், இந்த பெரிய பாறைகள், வெல்டிங் முறையில் பொருத்தப்பட்டன.எங்கள் கட்டட கலை வல்லுனர் ஜெயச்சந்திரனும், அவரது குழுவும், என் தந்தை அப்பச்சனின் மேற்பார்வையில், சென்னை குற்றாலத்தை அமைத்தனர். இதை அமைக்கும்போதே, இங்கு பொருத்தப்பட்டுள்ள பாறைகளின் ஆயுள், 14 ஆண்டுகள் மட்டுமே என்று, ஜெயச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, 2013 ஆண்டின் இறுதியோடு, அந்த காலக்கெடு முடிந்தது. அதன்படி, பழைய கட்டுமானத்தை நீக்கி, புதிதாக உருவாக்க துவங்கினோம்.ஆக., 2013 முதல், டிச., 2013 வரை, கிஷ்கிந்தாவில் சென்னை குற்றாலம் இயங்கவில்லை. கான்கிரீட்டினால் செய்யப்பட்ட, அந்த பாறைகளை உடைத்து எடுக்கவே, ஒரு மாதம் ஆயிற்று.மறுபடியும் இரும்புக் கம்பிகளுடன், கான்கிரீட்டினால் பாறைகள் செய்து, அவற்றை பொருத்துவதில், ஒரு சிக்கல் எழுந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த, அந்த திறமை வாய்ந்த உழைப்பாளிகள், இப்போது இல்லை. மாற்றாக சிறந்த டெக்னிக்கல் ஆலோசனைகள் பெற்று, எவர்சில்வர் கம்பிகளுடன், பைபர் கிளாசில், பெரிய பாறைகளை தயாரித்தோம். பைபர் கிளாசினால், அந்த பாறைகளை தயாரிப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. தயாரிப்பு செலவும் அதிகரித்தது. இவற்றின் ஆயுள்காலம், 25 ஆண்டுகள்.ஏற்கனவே குறிப்பிட்ட, ஐந்து மாடி கட்டடத்திற்கு வெளியே, 20டன் எடை கொண்ட இரும்பு பிரேம் பொருத்தி, பைபர் கிளாசில் செய்யப்பட்ட பாறைகளை, வெல்டிங் செய்து பொருத்தினோம்.சென்னை குற்றாலத்திற்கு வரும் பார்வையாளர்களை பரவசப்படுத்த, புதிதாக, இரண்டு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். 60 அடி உயரத்திலிருந்து, அடர்த்தியான நீர்வீழ்ச்சி ஒன்றும், அவ்வளவு வேகம் வேண்டாம் என்பவர்களுக்கு 30 அடி உயரத்திலிருந்து மற்றொரு நீர்வீழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 75 குதிரை சக்தி கொண்ட, 60 எச்.பி., மோட்டார்கள், உள்ளேயிருக்கும் கட்டடத்தில் இயங்குகின்றன. 60 அடி நீர்வீழ்ச்சியில் குளிப்பவர்களுக்கு, மசாஜ் செய்து கொண்டது மாதிரியான அனுபவம் கிடைக்கும்.சென்னை குற்றாலத்தை தவிர, மூன்று வாட்டர் அட்ராக் ஷன்ஸ், கிஷ்கிந்தாவில் உள்ளன. சுனாமி ராட்சத அலை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்கு, பல மாடி கட்டடத்தில், தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீரை, ஐந்தே வினாடிகளில் திறந்து விடும் போது, அதனால் உண்டாகும் ராட்சத அலைகள், கண் இமைக்கும் நேரத்தில் பார்வையாளர்களை வந்து அடையும்.இந்தியாவிலும் சரி, உலகத்திலும் சரி முதல் முறையாக நாங்கள் உருவாக்கியிருக்கும், 'ராக்கெட் மேன் ஷோ' மற்றும் மணிப்பூர் இளைஞர்கள் செய்யும், 'வாட்டர் ஸ்கீயிங்' எனப்படும் முப்பது நிமிட, 'த்ரில்லிங்' காட்சியும் இடம் பெற்றுள்ளன, என்றார். 'பிறரை மகிழ்விப்பது ரொம்ப சீரியசான விஷயம்...' என்று கூறும் ஜோஸ் அப்பச்சன், சென்னை குற்றாலத்தை, 'ரீ-மேக்' செய்து, பல ஆயிரக்கணக்கான மக்களை, தினமும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.அப்பச்சன் ஏழு ஆண்டுகள், கேரளா பிலிம் சேம்பரின் தலைவராகவும், ஒரு ஆண்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (சவுத் இந்தியன் பிலிம் சேம்பர்) தலைவராகவும் இருந்துள்ளார்.* இந்தியாவின் முதல் 3டி படமான, மை டியர் குட்டிச்சாத்தான், சினிமாஸ்கோப் படமான, தச்சோளி அம்பு, முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட, 70 எம்.எம்., படம் படகோட்டம் ஆகியவற்றை தயாரித்த பெருமை, அப்பச்சனையே சாரும்.* நடிகர் மோகன்லால், பூர்ணிமா ஜெயராம், ஷாலினி மற்றும் கீது மோகன் தாஸ் போன்ற நடிக, நடிகையர்களையும், பிரபல இயக்குனர்கள் பாசில், பிரியதர்ஷன் மற்றும் சிபி மலையில் ஆகியோரை, திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர், அப்பச்சன்.* சென்னையில், 42 டிகிரி வெயில் அடிக்கும் போது கூட, கிஷ்கிந்தா குற்றாலத்தின் வெப்ப நிலை, 18 டிகிரி மட்டும் தான் இருக்கும்.* சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்பதற்காக, கிஷ்கிந்தா வளாகத்திற்குள், புகை பிடிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது; மதுபானம் அருந்தியோ, போதை பொருட்கள் உபயோகித்தோ, கிஷ்கிந்தாவிற்குள் வர முடியாது.* இந்தியன் அசோசியேஷன் ஆப் அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் சங்கத்தின், கவுரவ உப தலைவராக ஜோஸ் அப்பச்சன் பதவி வகிக்கிறார்.* 'கிஷ்கிந்தாவை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது...' என்று பலர், என் தந்தையைக் கேட்டிருக்கின்றனர். அதற்கு என் தந்தை, 'தமிழில் எடுக்கப்பட்ட மை டியர் குட்டிச் சாத்தான் படத்தில், நான் நிறைய பணம் சம்பாதித்தேன். அந்த லாபத்தை, தமிழகத்திலேயே முதலீடு செய்து, என் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். நூற்றுக்கணக்கானவர்களுக்கு இதில் வேலை கிடைக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள், இங்கு வந்து, பார்த்து, அனுபவித்து, ரசித்து மகிழ்வர் என்றும் நினைத்தேன். எனவேதான், கிஷ்கிந்தா சென்னையில் உருவானது...' என்று, விளக்கம் கூறியிருக்கிறார் அப்பச்சன்.* கிஷ்கிந்தாவில் பணிபுரிபவர்களும், அந்தப் பகுதி மக்களும், 'சேப்டி சார்' என, அழைக்கப்படும் பி.கே.தோத்தாத்ரி தான், கிஷ்கிந்தாவில் உள்ள எல்லா வசதி மற்றும் விளையாட்டுகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர். மீண்டும் மீண்டும் பரிசோதித்து, தனக்கு முழு திருப்தி ஏற்பட்ட பின் தான், எந்த விளையாட்டையும், ஓ.கே., செய்வார்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !