உள்ளூர் செய்திகள்

தீர்த்தமாடுவோம் வாருங்கள்!

பிப்.18 மாசி மகம்'நீரின்றி அமையாது உலகு' என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலைகளின் பாதுகாப்பு கருதி, நம் முன்னோர் பல திருவிழாக்களை உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்று, மாசி மகம். இந்த விழா கொண்டாடப்படுவதற்குரிய புராணக்கதை இதோ...ஒரு சமயம் உலகம் அழிய இருந்தது. தேவர்கள் முதலான அனைத்து உயிர்களும் அழிந்து விடும் என்ற நிலையில், முதலும் முடிவுமில்லாத சிவனைச் சந்தித்தார் பிரம்மா.'ஐயனே... உலகம் அழியும் போது, என்னிடமுள்ள படைப்புக் கலன்கள் அழிந்து விடும். அப்படியானால், மீண்டும் உலகம் சிருஷ்டிக்கப்பட வேண்டும்... இந்தக் கலன்களைப் பாதுகாத்தருள வேண்டும்...' என வேண்டினார்.'பிரம்மனே... இந்த உலகம் பெரும் வெள்ளத்தால் அழிய இருக்கிறது. கடல் பொங்கி, உலகை மூழ்கடிக்கும். உன் படைப்புக் கலன்களை, அமுதம் நிரம்பிய ஒரு கும்பத்தில் வை. குடத்தின் நான்கு புறமும் வேதங்கள், புராணங்கள், இதிகாச ஏடுளைக் கட்டி விடு. குடத்தின் மீது தேங்காய், மாவிலை வைத்து, சுற்றிலும் நூலால் கட்டு. அதை, ஒரு உறியில் வை. வெள்ளத்தில் கும்பத்தை மிதக்க விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார்.உலகம் அழிந்த நாளில், பிரம்மாவும் அவ்வாறே செய்தார்; வெள்ளத்தில் கும்பம் மிதந்தது. அதையே கவனித்துக் கொண்டிருந்தார் சிவன். மிதந்த கும்பம், ஒரு இடத்தில் தரை தட்டி நின்றது. வெள்ளம் வற்றியதும், வேடன் வடிவமெடுத்து, தன் மகன் தர்மசாஸ்தாவை அழைத்தார் சிவன். அவரிடம், கும்பத்தை உ<டைக்க உத்தரவிட்டார். சாஸ்தா குறி வைத்தார்; குறி தவறவே, கவலையுடன் வில்லை தந்தையிடம் ஒப்படைத்தார்.'மகனே... கவலை வேண்டாம்...' என்று கூறி, குடத்தின் மீது அம்பெய்தார் சிவன். அதன் மூக்குப் பகுதி உடைந்து, அமுதம் சிதறியது. அது ஆங்காங்கே குளம் போல் தேங்கியது. அந்த இடம், 'குடமூக்கு' என்று பெயர் பெற்றது. இதுவே பிற்காலத்தில், 'கும்பகோணம்' என்று பெயர் மாற்றம் பெற்றது.அமுதத்தில் நனைந்த மணலை சிவன் அள்ளினார். அதை லிங்கமாக்கி, அதற்குள்ளேயே ஐக்கியமானார். இதனால், 'அமுதேஸ்வரர்' என்றும், 'கும்பேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார். மங்களகரமான உடையணிந்து, தன் கணவரைத் தேடி, கும்பகோணம் வந்த பார்வதிதேவி, 'மங்களநாயகி' என்ற பெயரில் தங்கினாள். புதிய உலகம் தோன்றிய பின், அம்பாள் வந்தமர்ந்த தலம் என்பதால், இது, முதல் சக்திபீடம் ஆயிற்று.அதன் பின், பிரம்மாவிடம் படைப்புக் கலன்களை ஒப்படைத்தார் சிவன். உலகம் மீண்டும் பிறந்தது. புதிய ஜீவன்கள் தோன்றின. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, கன்னியாகுமரி, பயோட்டணா என்ற ஒன்பது நதிகள் உருவாக்கப்பட்டன. மக்கள், வழக்கம் போல் தங்கள் முன்வினைப் பயன்படி, பாவ - புண்ணியங்களைச் செய்தனர். பாவங்களே மிகுதியாக இருந்ததால், அவற்றைக் குறைக்க புனித நதிகளில் நீராடினர். பாவச்சுமை தாளாமல் நதிகள் சிரமப்பட்டன. சிவனிடம் முறையிட்டனர் நதி தேவதைகள்.'கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் நீராடினால், பாவம் குறையும்...' என அவர் அருளினார். அதன்படி, மாசி மகம் நன்னாளில் அவை தீர்த்தமாடின. இவர்கள் ஒன்பது பேரும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாசி மகத்தன்று நீராட வரும் நாளையே, 'மகா மகம்' என்பர்.மாசி மகத்தன்று, கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் மட்டுமல்லாமல், கன்னியாகுமரி, வேதாரண்யம், ராமேஸ்வரம் கடல்கள், காவிரி, தாமிரபரணி போன்ற தீர்த்தங்களிலும் நீராடி வரலாம். இவை, பாவத்தை தீர்க்கும் தலங்களாகும். இன்று, புண்ணிய நதிகளெல்லாம் மக்களின் அலட்சியம் காரணமாக சீர்கெட்டு வருகின்றன. இவற்றைப் பாதுகாத்து பூஜிக்கவே, இத்தகைய விழாக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் முக்கியத்துவம் அறியாமல் மக்கள் இருக்கின்றனர். இந்த மாசி மகத்தில் இருந்தாவது, நீர்நிலைகளைப் பாதுகாக்க உறுதியெடுங்கள். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !