கனவுத்தோட்டம் (10) - தூதுவளை!
பலவிதமான சுவாச நோய்களை தீர்க்க வந்த துாதுவன் தான், துாதுவளை. இதற்கு, துாதுளம், துாதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என, பல பெயர்கள் உண்டு. இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.இதன் விதைகளை, மண்ணில் துாவி, நீர் தெளித்து வர, ஒரு வாரத்தில் முளைப்பு வந்துவிடும். ஒரு மாதம் ஆனதும், ஒரு அடி உயரம் வளர்ந்து விட்ட செடியை வேறு ஒரு பெரிய பை, ட்ரம் அல்லது தொட்டியில் செம்மண், சாண எரு, தோட்ட மண் கலந்து நட்டு நல்ல சூரிய ஒளியில் வைத்துவிட்டால் போதும். படர்ந்து விரிந்து வேலி போல் வளர்ந்து விடும். நல்ல தடிமனாய் இருக்கும் அடித்தண்டை நறுக்கி, மண்ணில் நட்டு வைத்தாலும் முளைப்பு வந்துவிடும்.துாதுவளை இலைகளை பறித்து நிழலில் உலர்த்தி, முட்களை நீக்க வேண்டும். ஏனெனில், முள்ளில் சற்று நச்சுத்தன்மை உள்ளதால், சமையல் செய்வதற்கு முன்பே நீக்க வேண்டியது அவசியம்.இலைகளை எண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி, அரைத்து சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, நாள்பட்ட காய்ச்சல் காணாமல் போகும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியை மட்டுப்படுத்தும். பார்வைக் குறைபாடு பிரச்னையை சரி செய்கிறது. ரத்த சோகை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும். துாதுவளையுடன், மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால், வறட்டு இருமல் குறையும். துாதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். துாதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வர எலும்புகள், பற்கள் பலப்படும்.இதன் தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில், ஐந்து நாட்கள் காய வைத்து பொடி செய்து, தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட, ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமைச்சல், பெருவயிறு மந்தம், மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர் சுரத்தல் மற்றும் சூலை நோய் ஆகியவற்றிற்கு, துாதுவளை கீரை சிறந்தது.துாதுவளை லேகியம் சளிக்கான சிறந்த தீர்வு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, தொண்டைக்கட்டு, இருமலுக்கு எடுத்துக் கொள்ளலாம். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். துாதுவளை நெய் என்பது, நம் வீட்டில் நெய் காய்ச்சும் போது முருங்கைக்கீரைக்கு பதிலாக துாதுவளை இலையை போட்டு பொரித்து கொள்வது.ஒரு கைப்பிடி இலையுடன், சின்ன வெங்காயம் இரண்டு நறுக்கி, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தினமும் காலையில் ஒரு கரண்டி சாப்பிட்டு வர, சளி தொல்லை தீரும்.வீட்டில் ரசம் வைக்கும் போது, சில துாதுவளை இலைகளை பறித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால், துாதுவளை ரசம் ரெடி.ஒரு கைப்பிடி துாதுவளை இலை, கருப்பு உளுந்து, புளி, தேங்காய் துருவல், சில பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து, உப்பு சேர்த்தால், துவையல் தயார். — முற்றும்- ம. வான்மதி