உள்ளூர் செய்திகள்

வைராக்கியம் இருந்தால்...

அவமானப்பட்டால் அடங்கிப் போகாமல், அதையே சவாலாக எடுத்து, வைராக்கியத்துடன் முயற்சி செய்தால், வாழ்க்கையில் முன்னேறலாம். ராமர், இந்த பூமியில் பிறந்ததே வைராக்கியத்தால் தான்.தசரதருக்கு குழந்தையாக, ராமர் பிறக்க வேண்டும். அப்போது தான், இங்குள்ள கஷ்டங்கள் நீங்கும் என, சர்வ லோகமும் எதிர்பார்த்தது. ஆனால், அவர் எப்போது பிறப்பார்ன்னு யாருக்கும் தெரியவில்லை. ஒருநாள், தசரதனைத் தேடி வந்தார், நாரதர்.'தசரதா, உனக்கு ஒரு சேதி தெரியுமா?' என, ஆரம்பித்தார். 'என்ன விஷயம்?' என்றார், தசரதர். 'தசரதா... நீ, அடிக்கடி தேவலோகத்துக்குப் போற சரி. அங்கேயும் உன்னை நல்லபடியாத்தான் வரவேற்கிறாங்க. உன்னை பிரியமாய் அழைத்து, தன் அரியாசனத்துலயே தனக்குப் பக்கத்துல உக்கார வச்சுக்கிறான், தேவேந்திரன்.'நீயும், சந்தோஷமா உக்கார்ந்து பேசிட்டு வந்துடற. ஆனா, நீ இங்கே வந்ததுக்கு அப்புறம் அங்கே என்ன நடக்குதுங்கறது உனக்கு தெரியுமா?' என்றார், நாரதர். 'என்ன நடக்குது, எனக்கு ஒண்ணும் தெரியலையே...' என்றார், தசரதர். 'தேவேந்திரனிடம் பேசிட்டு வந்த பிறகு, நீ, உக்கார்ந்திருந்த அரியாசனத்தை தண்ணி ஊற்றி கழுவி சுத்தப்படுத்தறாங்க. நீ என்ன, அந்த அளவுக்கு சுத்தமில்லாத ஆளா?' என்றார், நாரதர்.தசரதருக்கு, ரொம்ப அவமானமாக இருந்தது. 'அப்படியா செய்யறாங்க...' என்றார், தசரதர். 'ஆமாம்... வேணும்ன்னா நான் சொல்றது உண்மையா, இல்லையான்னு நீ சோதிச்சுப் பார்த்துக்கோ...' என்றார், நாரதர்.உடனே, புறப்பட்டு தேவலோகம் போனார், தசரதர். அங்கே, வழக்கம் போல இவரை அழைத்து உட்கார வைத்து பேசினார், தேவேந்திரன்.'சரி, நான் கிளம்பறேன்....' என புறப்பட்டார், தசரதர். வாசல் வரை வந்து வழியனுப்பி சென்றார், தேவேந்திரன். வெளியே கொஞ்ச நேரம் மறைந்து இருந்து, உள்ளே எட்டிப் பார்த்தார், தசரதர்.நாரதர் சொன்னது போல, தசரதர் உக்கார்ந்திருந்த ஆசனத்தை ரெண்டு தேவர்கள் கழுவி சுத்தப்படுத்தினர்.இந்த அவமானத்தை தாங்க முடியாமல், தேவேந்திரனிடம் போய், 'நான் உக்கார்ந்திருந்த இருக்கையை சுத்தம் பண்றீயே... நான் என்ன அந்த அளவுக்கு பாவியா?' என்றார், தசரதர்.'தசரதரே... மனுஷனுக்கு மூன்று கடன்கள் உண்டு. தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன். இதைத் தீர்க்காதவன் பாவியாகிறான். இதுல, மகனை பெறுவதால் தான், பித்ரு கடன் தீரும். 'உனக்கு மகன் இல்லை. அதனால், நீ பாவியாகிற. பாவி உக்கார்ந்திருந்த இடம்ங்கிறதுனால அதை சுத்தம் செய்ய வேண்டியது, எங்க கடமை...' என்றார், தேவேந்திரன். தசரதருக்குள் வைராக்கியம் எழுகிறது. 'தேவேந்திரரே... ஒரு மகனைப் பெற்ற பிறகு தான், இந்த சபையில் மறுபடியும் அடி எடுத்து வைப்பேன்...' என, சொல்லி போனார், தசரதர்.புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்; புத்திரர்கள் பிறந்தனர். இந்த கதையில் உள்ள கருத்து என்னன்னா... தேவேந்திரன், தசரதரை அப்படி அவமானப்படுத்தவில்லை எனில், அவருக்கு இப்படி ஒரு வைராக்கியம் பிறந்திருக்குமா?நமக்கு ஏற்படற சில அவமானங்களையும், வைராக்கியமா மாத்திக்குவோம்; வாழ்க்கையில் முன்னேறுவோம்! பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !