முருகனின் பாம்பு!
நவ., 9 கந்தசஷ்டிமுருகனின் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும். இதற்கும் கந்தசஷ்டிக்கும் தொடர்புண்டு. எந்த தெய்வத்தை வணங்கினாலும், அதற்குரிய மந்திரத்தை சொல்லும்போது, ஓம் என்றே துவங்குகிறோம். ஓம் கணேசாய நமஹ, ஓம் கார்த்திகேயாய நமஹ, ஓம் நமசிவாய, ஓம் சக்தி, ஓம் நமோ நாராயணாய... இப்படி, ஓம் சேர்க்காத மந்திரங்களே இல்லை.ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது என, பொருள். புதுசுக்கு எப்போதுமே மவுசு. வீட்டில் புதிதாக ஒரு பொருள் வாங்கினால், அதை முதல், 10 நாட்கள் துடைத்து, பத்திரமாக பாதுகாப்போம். கொஞ்ச நாள் சென்றதும் அது துாசு மண்டலத்துக்குள் புதைந்து விடும். அதே போல், குழந்தை பிறந்த கொஞ்ச நாள் கொஞ்சுவோம். வளர வளர கண்டிக்க துவங்குவோம். பெரியவர்களாகி விட்டால், கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுவோம். அதாவது, பிறந்த குழந்தை வளர்ந்து பழசாகி விடுகிறது. பழசானதும், வெறுப்பு தட்டி விடுகிறது. ஆனால், தெய்வங்கள் அப்படி அல்ல. எப்போதுமே அவர்கள் புதுசு தான். அவர்களுக்கு வயதாவதில்லை. பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. கோவிலுக்கு, 5 வயதில் போனாலும் சரி... 50 வயதில் போனாலும் சரி... தெய்வத்தைக் கண்டதும், நம்மை அறியாமல் கைகள் குவிந்து விடுகின்றன. ஓம் என்ற மகிமை மிக்க மந்திரத்தை ஓதியே உயிர்களைப் படைக்கிறார், பிரம்மா. ஒருமுறை, பிரம்மாவிடம், 'ஓம் என்ற மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் உயிர்களை படைக்கிறீர்களே... அதன் பொருள் என்ன...' என, கேட்டார், முருகன்.பிரம்மாவுக்கு பதில் தெரியவில்லை. 'ஒரு தொழிலைச் செய்பவனுக்கு, அதன் தலை முதல் அடி வரையான சகல விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தினமும் உச்சரிக்கும் இந்த மந்திரத்தின் பொருள் தெரியாமல், தொழில் செய்கிறீர். எனவே, உம்மை சிறையில் தள்ளுகிறேன்...' என்றார். படைப்புத் தொழிலை அவரே துவங்கினார். இச்செயலைக் கண்டித்த சிவன், 'பெரியவர்களை மரியாதையுடன் நடத்த தெரியாத நீ, சிவலோகத்திலிருந்து வெளியேறி விடு...' என்றார். தன் தவறை உணர்ந்து, கீழான பிறவியான பாம்பின் வடிவம் எடுத்து, காட்டுக்கு சென்று விட்டார், முருகன். இதை அறிந்த பார்வதி, சிவனிடம் பரிகாரம் கேட்டாள்.'சஷ்டி விரதம் 108 இருந்து, என்னை வணங்கினால், உன் மகன் மீண்டும் பழைய வடிவம் பெறுவான்...' என்றார், சிவன். பார்வதியும் அவ்வாறே சஷ்டி விரதம் அனுஷ்டித்தாள். முருகன், பழைய வடிவம் பெற்றார். தன்னை புத்திசாலி என நினைத்து ஆணவம் கொண்டு, சாபமாக பெற்ற பாம்பு வடிவத்தை, தன் காலடியில் அழுத்திக் கொண்டார், முருகன்.ஆணவம் அவ்வப்போது பாம்பு போல் தலை துாக்கும். அதை அடக்கி ஆள வேண்டும் என்பதே, கந்தசஷ்டி உணர்த்தும் தத்துவம்.தி. செல்லப்பா