புத்தாண்டு கொண்டாட்டங்கள்!
உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், பலவித வழிமுறைகளில், தனித்தன்மையுடன் கொண்டாடப்படுகின்றன. * கி.மு., 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபிலோனியர்கள், புத்தாண்டில் உழவுத் தொழிலுக்கு தேவையான கருவிகளுக்காக வாங்கிய கடன்களை திருப்பி அளிக்க உறுதி பூண்டனர். இது, அவர்களின் பொருளாதார நம்பிக்கையையும், புத்தாண்டின் புதிய தொடக்கத்தையும் குறித்தது இதேபோல், அக்டோபர் மாதத்தில், சாம்ஹைன் எனும் புத்தாண்டு விழாவை கொண்டாடினர். இறந்தவர்களின் ஆவிகள் தொல்லை தருவதாக நம்பி, அவற்றை விரட்டுவதற்காக இவ்விழாவை நடத்தினர். இது, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கொண்டாடப்படும் 'ஹாலோவீன்' விழாவின் முன்னோடியாக கருதப்படுகிறது * கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில், வாங்கூவர் பகுதி மக்கள், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, விசேஷ உடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இது, உடல் மற்றும் மனதைப் புத்துணர்ச்சி செய்யும் ஒரு வழிமுறையாக அவர்கள் கருதுகின்றனர் * ஐரோப்பாவில், 'புனித ஸில்வெஸ்டர் ஈவ்' எனும் புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. கி.பி., 314ல், போப் ஆண்டவராக இருந்த புனித ஸில்வெஸ்டர், ஒரு கொடிய கடற்பிராணியை பிடித்ததாகவும், கி.பி., 1000ல், அது தப்பி உலகை அழிக்கும் என, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரிய நாட்டு மக்கள் நம்பினர். அது நிகழாத போது, மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை விழாவாக கொண்டாடத் துவங்கினர். * ஈரான் நாட்டு மக்கள், ஏப்ரல் 20ம் தேதி அன்று புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். அதற்கு முன் வரும் புதன்கிழமையன்று நெருப்பின் மீது குதித்து, தங்களை துாய்மைப்படுத்தி கொள்கின்றனர். இது, இந்தியாவின் தீமிதி விழாவை ஒத்திருக்கிறது * புத்தாண்டின், 15ம் நாள் வீட்டில் இருப்பது கெட்ட சகுனமென கருதி, ஈரானியர்கள், வெளியில் சென்று முளைவிட்ட கோதுமையை நீர்நிலைகளில் கரைப்பர். இது, இந்தியாவில், தென் மாநிலத்தவர்கள், திருமணங்களின் போது நவதானியங்களை நீரில் கரைக்கும், 'பாலிகை கரைத்தல்' பழக்கத்தை நினைவூட்டுகிறது * சீன நாட்டு மக்கள், கொடிய ஆவிகளை விரட்ட, புத்தாண்டு அன்று வீட்டின் கதவுகளை மூடிவிட்டு, வாசலில் பட்டாசுகள் வெடிப்பர். இதன்மூலம் தீமையை அகற்றுவதாக கருதுகின்றனர். இது, அவர்களின் ஆன்மிக நம்பிக்கைகளுடன் பிணைந்த விழாவாகும். நம்மூர் மக்கள், போகி அன்று பழையவற்றை கழிப்பது போல, புத்தாண்டு அன்று பழைய பொருட்களை அகற்றுகின்றனர், சீனர்கள். ஆனால், புத்தாண்டு அன்று குப்பைகளை பெருக்கி தள்ளுவது, செல்வத்தை இழக்கச் செய்யும் எனவும் நம்புகின்றனர் * இந்தியாவில் கொண்டாடப்படும், 'ஹோலி' பண்டிகையைப் போல, வண்ண நீர்களை ஒருவர் மீது ஒருவர் தெளித்து, ஆனந்தமாக புத்தாண்டை கொண்டாடுகின்றனர், கம்போடியா நாட்டு மக்கள். இது, சமூக ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது * ஜப்பான் நாட்டு மக்கள் புத்தாண்டு அன்று நீண்ட நேரம் வாய்விட்டு சிரிப்பதால், நல்ல அதிர்ஷ்டம் வரும் என, நம்புகின்றனர். இந்த நம்பிக்கை, அவர்களின் மகிழ்ச்சியை மையப்படுத்திய பண்பாட்டை பிரதிபலிக்கிறது * ஸ்காட்லாந்து நாட்டில், புத்தாண்டில் வீட்டுக்கு வரும் முதல் விருந்தினரால், நன்மை அல்லது தீமை ஏற்படுமா என, பார்ப்பது வழக்கமாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில், பண்பாட்டு மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன், புத்தாண்டு கொண்டாட ப்படுகிறது. தொகுப்பு : எம்.முகுந்த்