உள்ளூர் செய்திகள்

திண்ணை!

கற்பகம் புத்தகாலயம் வெளியீடு, இயக்குனர் மகேந்திரன் எழுதிய, 'சினிமாவும், நானும்' நுாலிலிருந்து: சமீபத்தில் இறந்த, பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் கதை வசனகர்த்தா, கிரேசி மோகன். தன் கதைகளில் கதாநாயகி பெயர், ஜானகி என இருப்பது ஏன் என்பதற்கு, ஒருமுறை இப்படி விளக்கம் கூறினார்...'ஜானகி என்ற, என் பள்ளி ஆசிரியையை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், அவர் பெயரையே, என் கதாநாயகிகளுக்கும் வைத்து விட்டேன்...' என்றார்.அதேபோல், என் இயக்கத்தில் வெளியான படங்களில், கதாநாயகியின் பெயர், லட்சுமி என்றே இருக்கும். தங்கப்பதக்கம் படத்தில், எஸ்.பி.சவுத்ரியின் மனைவி பெயர், லட்சுமி. உதிரிப்பூக்கள் படத்தில், முக்கிய கதாபாத்திரமான அஸ்வினியின் பெயரும், லட்சுமி. இப்படி, என் எல்லா படங்களிலும், முக்கியமான பெண் கதாபாத்திரங்களுக்கு, லட்சுமி என்று தான் பெயர் வைப்பேன். இதற்கு காரணம், மறைந்த நடிகர், செந்தாமரையின் மனைவி பெயர், லட்சுமி. சென்னை வந்த ஆரம்ப காலத்தில், எத்தனையோ நாட்கள், மதிய சாப்பாட்டு நேரத்தில், திடீரென, என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார், செந்தாமரை. தன் மனைவியிடம், 'எங்க ரெண்டு பேருக்கும், சாப்பாடு எடுத்து வை...' என்பார், மிடுக்காக.அந்நேரம், செந்தாமரையின் குடும்பம் வறுமையில் உழன்றது. அவர் மனைவி, லட்சுமியோ, எங்கள் இருவருக்கும் பரிமாறுவார்.பல நட்களுக்கு பிறகு தான், எனக்கு உண்மை தெரிய வந்தது. தனக்கு வைத்திருந்த சாப்பாட்டை எனக்கு வைத்து, என் பசியை போக்கிய அந்த தாய், எங்கள் இருவருக்கும் தெரியாமல் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறார். இந்த உண்மையை அறிய நேர்ந்தபோது, துடித்து விட்டேன்.தான் பட்டினி கிடந்து, கணவன் அழைத்து வரும் விருந்தாளியின் பசியை போக்கிய, அந்த பெண்மணியின் உள்ளத்து மேன்மையை, என்னால் மறக்க முடியவில்லை. அதனால், என் நன்றியை காட்டும் விதமாக, அந்த பெண்மணியின் பெயரை, என் படங்களில் பிரதான கேரக்டர்களுக்கு சூட்டி, மனம் நிறைந்தேன்.வானதி பதிப்பகம் வெளியீடு, அவ்வை சண்முகம் எழுதிய, 'எனது நாடக வாழ்க்கை' நுாலிலிருந்து: கானாடு காத்தான், வை.சு.சண்முகம் செட்டியார், பாரதியாரின் நண்பர். ஒருமுறை, அவர் வீட்டிற்கு சென்று, 'எனக்கு, அவசரமாக, 100 ரூபாய் வேண்டும். கொடுப்பீரா...' என்றாராம், பாரதியார்.உடனே செட்டியாரும், 'இதோ தருகிறேன்...' என்று பெட்டியை திறந்து, 100 ரூபாய் எடுத்து, பாரதியிடம் கொடுத்துள்ளார்.நோட்டை இருபுறமும் திருப்பி பார்த்து, 'இது எனக்கு தானே...' என்றாராம், பாரதி.'ஏன்... என்ன சந்தேகம்?' என்றார், செட்டியார்.'இல்லை. எனக்கு சொந்தமான இந்த நோட்டை, நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள, உரிமை உண்டல்லவா?' என்றார், பாரதி.'தாராளமாக... எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்...' என்றார்.மீண்டும், நோட்டை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே நின்றார், பாரதியார். ஒன்றும் புரியாமல் செட்டியார், 'ஏதாவது தேவையானால், வாங்கி வரச் சொல்கிறேனே...' என்று கூறியுள்ளார்.அதற்குள், தன் கையிலிருந்த, 100 ரூபாயை சுக்கு நுாறாக கிழித்து போட்டு விட்டார், பாரதி. உடனே செட்டியார், 'ஏனய்யா கிழித்தீர்?' என, கேட்டார்.'என் நோட்டை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உமக்கென்னய்யா அக்கறை...' என்று சொல்லி, கலகலவென சிரித்தாராம், பாரதி.அந்த நாளில், அனேகமாக எல்லா ஊர்களிலும் ரவுடிகள் உண்டு. அவர்கள், நாடககாரர்களிடம் எப்போதும் தங்கள் கைவரிசையை காண்பிப்பது வழக்கம். இதற்காக, ஒவ்வொரு ஊரிலும், சில ரவுடிகளுக்கு, இலவச டிக்கெட் கொடுத்து சரிப்படுத்துவதும் உண்டு.துாத்துக்குடியில், இப்படிப்பட்ட ரவுடிகள், 1940களில் அதிகம். எந்த கம்பெனி நாடகம் போட்டாலும், இவர்கள் தான், நுழைவு வாயிலில் நிற்பது வழக்கம். அதற்காக குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என்று வாதாடுவர். தர மறுத்தால், 'நாடகம் எப்படி நடக்கிறது பார்க்கலாம்...' எனச் சொல்லி, அடுத்த நாள், நாடகம் ஆரம்பத்திலோ, நடுவிலோ புகுந்து கலாட்டா செய்வர். இவர்கள் விஷயத்தில், போலீசார் தலையிடவே மாட்டார்கள். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !