திண்ணை
வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், தமிழகத்துக்கு வந்திருந்தபோது, மதுரை மாநகரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்த விழா கமிட்டியினர், 'வங்காளத்தை சேர்ந்தவர், தாகூர். அவருக்கு வங்காள மொழியில் வரவேற்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், வங்காள மொழி இங்கு யாருக்கும் தெரியாது. 'தமிழ் மொழியில் வரவேற்பு கொடுத்தால், அவருக்கு புரியாது. ஆகவே, ஆங்கில மொழியில் வரவேற்பு கொடுப்போம்...' என்று, முடிவு செய்தனர்.அதை அறிந்த தாகூர், தன் உரையின்போது, 'அவரவர் தாய்மொழியின் மீது பற்று கொண்டிருக்க வேண்டும். பிறருக்குப் புரியாது என்பதற்காக, வேறு மொழியை நாடுதல் தவறு. குயில், கிளியைப் போல பாட முயற்சி செய்யக் கூடாது.'குயில் தன் குரலாலேயே கூவ முயற்சிக்க வேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் மொழியாகிய தமிழ் மொழியிலேயே எனக்கு வரவேற்பு அளித்திருக்கலாம்...' என்றார்.பிற மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றுதலை எண்ணி, கூட்டமே வியந்தது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஆப்ரகாம் லிங்கன் போட்டியிட்ட போது, கிராமப்புற வயல்வெளிக்கு சென்று, ஓட்டு கேட்டார். வயலில், தானியங்களை அறுவடை செய்து கொண்டிருந்தார், ஒரு விவசாயி.அவரிடம் சென்ற லிங்கன், 'தாங்கள் எனக்கு ஓட்டளிக்க வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார்.அதற்கு விவசாயி, 'அப்படியே செய்கிறேன். இப்போது நான் சாப்பிடப் போகிறேன். அதுவரை இந்தக் கதிர்களை அறுக்கிறீர்களா...' என்றார்.'ஓ...' என்று சொன்ன லிங்கன், அவரிடமிருந்து அரிவாளை வாங்கி, கதிர்களை அறுக்கத் துவங்க, சாப்பிடச் சென்று விட்டார், விவசாயி.சாப்பிட்டு விட்டு வந்த விவசாயி, லிங்கனைக் காணாமல் திகைத்தார். ஆனால், கதிர்கள் அறுக்கப்பட்டு அழகாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. அதே சமயம், அரிவாளையும் காணவில்லை.ஆப்ரகாம் லிங்கன், தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஒரு விருந்து நடத்தினார். அதில் கலந்து கொள்ள அந்த விவசாயியையும் அழைத்திருந்தார்.அப்போது லிங்கன் அவரிடம், 'தங்கள் கதிர்களை நான் நன்றாக அறுவடை செய்திருந்தேனா...' என்று, ஆவலோடு கேட்டார்.'நன்றாகத்தான் அறுவடை செய்திருந்தீர்கள். ஆனால், என் அரிவாளைக் காணவில்லையே; என்ன செய்தீர்கள்...' என்று கேட்டார், விவசாயி.'உங்கள் பண்ணையில் இருந்த குடிசையின் கூரையில் சொருகி விட்டு வந்தேனே...' என்றார், லிங்கன்.விருந்து முடிந்து, பண்ணைக்குத் திரும்பிய விவசாயி, தன் குடிசையின் கூரையில் அரிவாள் சொருகி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.ஆப்ரகாம் லிங்கனின் கடமை உணர்வையும், கண்ணியத்தையும் எண்ணி வியந்தார், விவசாயி. நடுத்தெரு நாராயணன்