அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா —எனக்கு, 23 வயது. வீட்டுக்கு ஒரே பெண். அப்பா, விவசாயம் செய்கிறார். அம்மா, இல்லத்தரசி. பாட்டி, தாத்தா, அத்தை, மாமா என்று, பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கின்றனர். கிராமத்தில், எங்கள் குடும்பம் தான் பெரிது; ஊரில் நல்ல மதிப்பும் உண்டு.அருகில் இருக்கும் நகரத்தில், கல்லுாரியில் பட்டப் படிப்பு படிக்க வைத்தனர். ஆனால், பாதுகாப்பாக வளர்ப்பதாக எண்ணி, என்னை கூண்டுக்கிளியாகவே வளர்த்து விட்டனர்.போட்டி தேர்வு எழுத, கணினி பயிற்சி வகுப்பு என, எங்கேயும் வெளியே அனுப்பவில்லை. என்னோடு படித்த தோழியர் அனைவரும், கணினி பயிற்சி முடித்து, வெவ்வேறு ஊரில், நல்ல வேலையில் உள்ளனர்.அவர்களின் நடை, உடை, பாவனை எல்லாம் மாறி, கை நிறைய சம்பளத்துடன் வளைய வருவதை பார்க்க, ஏக்கமாக உள்ளது.எனக்கு, ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதால், திருமண தடை உள்ளதாக ஜோதிடர் கூறியதிலிருந்து, அதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கின்றனர். திருமணமாகி, புகுந்த வீடு போனாலாவது, வெளி உலக சுவாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய் விட்டது.நாள் முழுவதும் வீட்டுக்குள் அடைந்திருப்பது, வெறுப்பாக உள்ளது. என் தோழியரை நினைத்து, தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேற்படிப்பு படிக்க வேண்டும், உலகம் முழுதும் சுற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.என் கனவு நனவாகுமா... நான் என்ன செய்ய வேண்டும், அம்மா.— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு —உனக்கு, 23 வயதாகிறது. மேஜராகி பல ஆண்டுகள் ஆகின்றன. யாரும் உன்னை, கூண்டுக்கிளியாக வளர்க்கவில்லை. சுய விருப்பத்துடன், நீதான் கூண்டுக்கிளியாய் வாழ்கிறாய். இப்போதெல்லாம், 10 வயது சிறுவர் - சிறுமியர் கூட, தங்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெறுகின்றனர்; கேட்டு தரவில்லை என்றால், போராடி பெறுகின்றனர்.மேற்படிப்பு படிக்க போகிறாயா, கணினி பயிற்சி பெற விரும்புகிறாயா, போட்டி தேர்வு எழுத விரும்புகிறாயா அல்லது செவ்வாய் தோஷத்தை துாக்கி போட்டுவிட்டு, திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா... எது உன் விருப்பம் என்பதை, தெளிவான மனதுடன் தீர்மானி.முதலில், உன் விருப்பத்தை, அம்மாவிடம் கூறு. அவர் மறுத்து விட்டால், அப்பாவிடம் கூறு. அவரும் மறுத்து விட்டால், தாத்தா, பாட்டியிடம் கூறு.அவர்களும் மறுத்து விட்டால், 'விருப்பமானதை செய்ய, எனக்கு உரிமை இருக்கிறது. யார் அனுமதியும் தேவையில்லை...' என, உரிமைக்குரல் எழுப்பு.'எனக்கு, இறக்கைகள் முளைத்து விட்டன. ஏழாம் வானம் வரை பறக்க விரும்புகிறேன். சொந்தமாய் துடுப்புகள் முளைத்து விட்டன. எல்லா கடலிலும் நீந்த விரும்புகிறேன். எங்கு பறந்தாலும், நீந்தினாலும், குடும்ப மாண்பை காக்கும் வண்ணம் நடந்து கொள்வேன்...' என, குடும்பத்தினரிடம் உறுதியளி.உன் உரிமைக்குரலை கேட்டு, முதலில், குடும்ப அங்கத்தினர்கள் திகைத்து போவர், நசுக்க பார்ப்பர். உன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், அவர்கள், தங்களது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வர். உரிமைக்குரலை எழுப்பும்போது, 'நான் உங்களை நேசிக்கிறேன். உறவு முறைகளை மதிக்கிறேன். அதே நேரத்தில், எனக்கான உரிமைகளை உரத்த குரலில் கேட்டு பெறுவேன்...' என்ற, பாவனையை வெளிப்படுத்து.'மேற்படிப்பு மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம், நம் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்வேன்...' என, உறுதியும் கூறு.மேற்படிப்பையும், போட்டி தேர்வையும், ஐந்து ஆண்டுக்குள் முடித்து விடு. சுற்றுலா துறையை தேர்ந்தெடுத்து படித்தால், உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்ற, உன் ஆசையும் நிறைவேறும்.ஜாதகத்தை நம்பாத வரனை, 'மேட்ரிமோனியல்' பகுதியில் தேடு. அதன் மூலம் வரும் வரன்களின் விபரத்தை, குடும்பத்தாரிடம் கொடுத்து, மேற்கொண்டு பேச சொல். உனக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் சம வயதினனாகவோ அல்லது ஒன்றிரண்டு வயது மூத்தவனாகவோ இருத்தல் சிறப்பு.திருமணத்திற்கு பின், நீ வேலைக்கு போவதை, வருங்கால கணவர், முழு மனதாய் ஆதரிக்கிறாரா, வரனின் பெற்றோர், நற்சிந்தனை உள்ளவர்களா என்பதை பார்.தோழியர்களுக்கு இருப்பதை எல்லாம் பார்த்து பொறாமைப்படாதே. உன்னிடம் இருக்கும், சில திறமைகள், அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.உழைத்து பெற்றதில் திருப்தியும், உடல், மன ஆரோக்கியமும், இறையச்சமும், ஈகோ இல்லாத திருமண வாழ்க்கையுமே, மனித வாழ்வின் உண்மையான வெற்றிகள் மகளே.அர்த்தப்பூர்வமான வாழ்க்கையை வாழ, வாழ்த்துகிறேன்.- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்