உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள அம்மாவுக்கு —தங்களது மகளாக எண்ணி, எனக்கு வழி கூறுங்கள். எனக்கு வயது 29. நான், அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஒரே மகள். அவள், என் மீது உயிரையே வைத்திருக்கிறாள்; தற்போது, அவளுக்கு, மூன்றரை வயது ஆகிறது.என் பிரச்னை என்னவென்றால், என்னை ஒரு ஆசிரியருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான நாள் முதல், இன்று வரை, அவர் என்னிடம் ஒருநாள் கூட அன்பாக பேசியது இல்லை; ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை. இவற்றிற்கெல்லாம் நான் பலமுறை ஏங்கி இருக்கிறேன்; ஏன்... அழுது கூட இருக்கிறேன்.என்னுடன் பிறந்த சகோதரிகளின் கணவர்கள், அவர்களிடம் அன்பாக இருப்பதை பார்த்தால், 'ஏன், கடவுள் என்னை மட்டும் இப்படி பழி வாங்கி விட்டார்...' என, என் மனம் ஏங்குகிறது. சிறு வயதிலிருந்து, என் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன்; அதனால், நானே என்னை, முன்பாதி இன்பம், பிற்பாதி துன்பம் என்று தேற்றிக் கொண்டேன்.அடிக்கடி சிறு விஷயத்திற்கு எல்லாம் இருவருக்கும் சண்டை வரும். அதிகம் கோபம் கொள்வது, நான் தான் என்பது எனக்கு தெரியும். என்னை, என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை; இதனால், எனக்கு அதிக மன உளைச்சலாக உள்ளது.இதற்கு காரணம் எனக்கு ஒரு நாள் புரிந்தது. பெண் பார்க்கும் போதே, அவருக்கு, என்னை பிடிக்கவில்லையாம். அவர்கள் பெற்றோர் கூறியதற்காகவும், ஆசிரியை என்பதாலும், என்னை திருமணம் செய்து கொண்டாராம். இதைக் கேட்ட நொடியிலிருந்து, எனக்கு தூக்கம் வரவில்லை; என்னால் அவரை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இனி, அவருடன் சேர்ந்து வாழ, என்னால் முடியுமா என்று கூட தெரியவில்லை.ஆனால், என் பெற்றோருக்காக நான் வாழ்ந்து தான் ஆக வேண்டும். இதயம் வெடிப்பது போல் இருக்கிறது. தயவு செய்து எனக்கு பதில் எழுதுங்கள்.உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.— இப்படிக்கு, பெயர் சொல்ல விரும்பாத வாசகி.அன்புள்ள மகளுக்கு —நிறைய ஆண்கள் செந்தில் மாதிரி இருந்து, லட்சுமி ராய் போல், மணமகளைத் தேடுவர். லட்சுமிராய், ஆர்யா போன்ற மணமகனைத்தானே தேர்ந்தெடுப்பார் என, உணர மாட்டார்கள். அழகு என்பதற்கான அளவுகோல், ஆளுக்கு ஆள் மாறுபடும்.உண்மையான அழகு, இளமை, ஆரோக்கியம், நன்னடத்தைகளில் பொங்கி வழியும். உன்னை பார்க்காமலேயே கூறுகிறேன்... நீ அழகுதான். கடிதத்தை, 'சிவா' என ஆரம்பித்திருக்கிறாய்; ஆகையால், நீ ஒரு சிவ பக்தை.'நான் ஒரு முன்கோபி...' என, நீ ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால், நீ தவறுகளை ஒப்புக் கொள்ள, மறுக்காத நேர்மையான பெண் என தெரிகிறது. கடித முடிவில், ஒரு கண், கண்ணீர் விடுவது போல் வரைந்திருக்கிறாய். அதனால், உனக்கு ஓவியத் திறமை இருக்கிறது என உணர்ந்தேன். இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு என எழுதியிருக்கிறாய். ஆகவே, உனக்கு படைப்பியல் தத்துவம் தெரிகிறது என அறிந்தேன். உன்னிடம் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. உன்னுடைய குண்டு, குண்டான கையெழுத்தை பார்க்கும் போது, நீ ஒரு கற்பனைவாதி என்பது புலனாகிறது.நிறைய ஆசிரியர்களுக்கு, வாழ்க்கையில் பணமே பிரதானம். பணம், பணம் என்று அலைந்து, வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களையும், உன் கணவர் இழக்கிறாரோ என, சிந்திக்கத் தோன்றுகிறது.உன்னுடன் பிறந்த சகோதரிகள் தத்தம் கணவர்மாரிடம் சந்தோஷமாய் குடும்பம் நடத்துவதாய் எழுதியிருந்தாய். கண்களை நம்பாதே... வீட்டுக்கு, வீடு வாசல்படி; அங்கும், டன் கணக்கில் அதிருப்தி இருக்கும். வெளிக்காட்டாமல், பெரும்பாலானோர் நடிக்கின்றனர். சிலர், மொட்டை மாடியில் நின்று, அதிருப்திகளை பட்டமாய் பறக்க விடுகின்றனர்.ஆண்களை வசீகரிப்பது ஒரு கலை. எங்கள் தெருவில், நான்கடி உயரப் பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம், அழகான அம்சம் எதுவும் இல்லை. ஆனால், தன் உடல் மொழியால் கணவனை மட்டுமல்ல, தெரு ஆண்கள் ஒட்டுமொத்த பேரையும் வசியப்படுத்தியுள்ளார்.சுயசுத்தம் பேணு. மாலை வீடு திரும்பியதும், குளித்து, புத்தாடை மாற்றிக் கொள். நீயே பூ வாங்கி, தலையில் வைத்துக் கொள்; கணவனை வசீகரி.உன் கணவன் வில்லன் போல் காட்சியளிக்கும், அரை குறை குணசித்திர நடிகர். ஆயிரம் மடங்கு கொடூரமான அதிபயங்கர வில்லன்கள், கணவன் ஒப்பனையில், நாட்டில் கோடிக்கணக்கில் நடமாடுகின்றனர்.பிரச்னைகளை மிகைப்படுத்தி பார்க்காதே... ஏன் உனக்கு இதயம் வெடிக்கிறது? அப்பட்டமான சுயநலத்தால்.இயல்பான ஒரு பொழுதில் உன் கணவரிடம், 'நீங்க என்னை பெண் பார்க்க வந்தப்ப, எனக்கு உங்களை அறவே பிடிக்கல... என்ன பண்றது? என் பெற்றோருக்காக உங்களை கட்டிக்க ஒப்புக்கிட்டேன்!' என, ஒரு குண்டைத் தூக்கிப் போடு.'கடவுளை... உன்னை மட்டும் பழி வாங்கி விட்டார்...' என, புலம்பி இருக்கிறாய். 'நான் கடவுள்' படத்தில், ஒரு கதாபாத்திரம், இரு கை, இரு கால் இல்லாமல் வரும். நடித்தவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி என நினைக்கிறேன். அந்த மனிதர், நிஜத்தில் ஒரு தன்னம்பிக்கைவாதி. எத்தனையோ பேருக்கு தன்னம்பிக்கையூட்டி, வாழ்க்கையில் முன்னேற செய்திருக்கிறார். அவர் கோயம்புத்தூரில் வசிப்பதாக பத்திரிகை செய்தி. அவர், 'கடவுள் பழிவாங்கி விட்டார்...' என புலம்பவில்லை; பின்னடைவை முன்னேற்றமாய் மாற்றினார்.இயற்கை பேரிடர்கள், உயிர் கொல்லி நோய்கள், வறுமை, உறவுகளின் வஞ்சகம், திருமண உறவில் ஏமாற்றம், சாதீய காழ்ப்புணர்ச்சி இத்தனையும் மீறித் தான் ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு சாதனை வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது.நான் மட்டும் தான் உலகம் என்ற சுயநலத்தை உதறு. கேவலம், ஒரு முழம் பூவுக்கா இப்பிறவி எடுத்தாய்? நிறத்தாலும், இனத்தாலும், மொழியாலும் வேறுபட்டோர் சேர்ந்து வாழும் போது, நீயும், உன் கணவரும் சேர்ந்து வாழ முடியாதா என்ன?ஆசிரியை என்ற அளவில் தேங்கிப் போகாதே... மாணவ, மாணவியருக்கு சிறப்பான கல்வி மற்றும் எதிர்காலத்தை வழங்கும் சரஸ்வதி தேவி ஆகு. உன் தினப்படி செயல்பாட்டை பரப்பரப்பாய் வைத்துக் கொண்டால், மனதிற்குள் சிறு, சிறு ஆவலாதிகள் தோன்றாது.கிளியே... உன் கொல்லைப்புறத்துக்குள் பறக்காதே... ஏழாம் வானம் வரை பற!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !