அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு, 28 வயது; திருமணமாகி, ஒன்பது வருடம் முடிந்து விட்டன. என், எட்டு வயது மகனையும், ஆறு வயது மகளையும் நினைக்கும் போது, அவர்களுக்காக வாழ வேண்டும் என்று, கடமைக்காக வாழ்கிறேன்.அம்மா... நான் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தங்கை, தம்பியோடு, நான், அம்மா, அப்பாவை பெற்றவரோடு, (அதாவது, அம்மாச்சி மட்டும்) கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். எங்களை நல்ல முறையிலே வளர்த்து, படிக்கவும் வைத்தனர்; நாங்களும் நன்றாகவே படித்தோம்.என் அம்மாவின் சித்தப்பா வீட்டில் இரண்டு பையன்கள். அவர்களும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகத்தில் இருந்தனர். சின்ன மாமா வுக்கும், எனக்கும்தான் திருமணம் என்று சொல்லியே வளர்த் தனர்; நானும், சிறு வயதிலிருந்தே, அதே எண்ணத்துடன் வளர்ந்தேன்.அவரும், என்னுடன் நன்கு பழகுவார்; உரிமை யுடன் வாடி, போடி என்று சொல்வார்.பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, மாமாவைத் தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று இருந் தேன். அவர், காலேஜில் படிக்கும் போது, என்னை வம்பிழுத்து, சின்னச் சின்ன சில்மிஷம் செய்வது என இருந்தார்; ஆனால், நான் விலகி ஓடி விடுவேன்.இந்த நிலையில், பெரிய மாமாவுக்கு நிறைய இடங்களில் பெண் தேடி அலைந்தனர்; ஆனால், பெண்ணே கிடைக்கவில்லை. என்னோட துரதிர்ஷ்டம், என் சித்தப்பா, என் சின்ன மாமாவின் அப்பாவிடம், 'ஏன் பொண்ணு, பொண்ணு என்று அலைகிறீர்கள்... எப்படி தேடினாலும், 17 - 18 வயது பெண்தானே அமைகிறது. நம் வீட்டில் இரு பெண்கள் இருக்கின்றனர்... அவர்களையே பேசுவோம்...' என்று சொல்லி இருக்கிறார்.பெரிய பையனுக்கு, சின்ன பொண்ணும், சின்ன பையனுக்கு, பெரிய பொண்ணும் என்று பேசியுள்ளனர். (என் தங்கை பிளஸ் 1, நான் பிளஸ் 2 படிக்கும் போது!) என் அம்மா இதற்கு சம்மதிக்க வில்லை; எங்களிடம் இதைப் பற்றி பேசவும் இல்லை. சின்ன மாமா, 'எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம், நாலு வருடம் போகட்டும், நானும் நல்ல நிலைக்கு வரவேண்டும், அந்த பொண்ணும் படிக்கட்டும்...' என்று சொல்லவே, உடனே, 'இவன் கல்யாணம் செய்ய மாட்டான், பொய் சொல்கிறான்...' என்று நினைத்து, என் மாமனார், என் அம்மாவிடம் பெரிய பையனுக்கு என்னை பெண் கேட்டு வந்தார். என் அம்மா, 'சின்ன பையனுக்குத்தானே என்று சொன்னீர்கள்... இப்போது பெரிய பையன் என்கிறீர்களே...' என்று கேட்க, 'அவன் உன் மகளை திருமணம் செய்ய மாட்டானாம்... பெரியவனுக்கும் வேறு இடத்தில் பெண் எடுத்து விட்டால், நம் சொந்தமே பிரிந்து விடும்...' என்று சொல்லி அழுது விட்டார்.என்னிடம் மாமனார், சித்தப்பா, சித்தி அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டனர். நான் மாட்டேன் என்று மட்டும் சொன்னேன்; என் மனதில் உள்ள எண்ணத்தை சொல்லவில்லை. 'சின்னவன் உன்னை கட்ட மாட்டான்; நம் சொந்தம் இப்படியே பிரிந்து போய் விடும்; ஆதரவு அற்றுப் போய் விடுவீர் கள்...' என்றனர். மூன்று நாள் நான் சாப்பிடவே இல்லை. பிறகு, எப்படியோ என்னை சம்மதிக்க வைத்து, பிளஸ் 2வை பாதியிலே நிறுத்தியும் விட்டனர். திருமணத்தின் போது எனக்கு வயது 18, அவருக்கு 31.பெரிய மாமாவுக்கும், எனக்கும் திருமணம் முடிந்தது. அழகான கணவர்; அன்பானவர், என்னை மிகவும் நேசிப்பவர். என்னை உயிராய் நினைத்து, பார்த்துக் கொண்டார்; நன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த நிலையில், அவர் தொழிலுக்கு ஏற்றாற்போல் குடி பழக்கத்தை கற்றுக் கொண்டார். நான் எவ்வளவோ செய்தும் என்னால் அவரை குடி பழக்கத்திலிருந்து மீட்க முடியவில்லை.இந்நிலையில், சின்ன மாமாவுடன் தான் அந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தோம். கோபம், வெறி, 'இவனை பார்க்கக் கூடாது; இவனிடம் பேசக் கூடாது...' என்ற வைராக்கியத் தில், அவர் இப்படி வந்தால், நான் அப்படி போய் விடுவேன்.இந்த சூழ்நிலையில், இரண்டு பிள்ளைகள் பெற்றேன். பாப்பா கைக் குழந்தையாக இருக்கும் போது, சின்ன மாமா சில சில்மிஷம் செய்ய தொடங்கினார். நான் தனியாக படுத்திருக்கும் போது, என்னை பார்த்துக் கொண்டே இருப்பது, அப்படியே மேலே சாய்ந்து விடுவது என்று. இரவு நேரத்தில் நான் விழித்து விடுவேன். 'சனியனே... அறிவில்லை?' என, திட்டி முறைத்தால், அப்படியே வெளியே போய் விடுவார்; இப்படி, பலமுறை நடந்து இருக்கிறது.ஆனால், எப்படியாவது அதை தடுத்து, பின் அவர் அம்மாவிடம் இதைப்பற்றி சொல்லி விட்டேன். அவர் அம்மாவும், அவரை நிறைய திட்டினார்; ஆனால், என் கணவரிடம் சொல்ல வில்லை; பெரிய பிரச்னை ஆகிவிடும் என்ற பயம்தான்.அதோடு கடைசி. வேறு எந்த தொந்தரவும் இல்லை. நான் அந்த பாதையில் போனால், அவர் விலகி வேறு பாதையில் போய் விடுவார்.பெரிய மாமாவுக்கு குடி அதிகமாகவே, சர்க்கரை வியாதி வந்தது. பின், உடல் இளைத்தது; பண வரவு குறைந்தது. பல வகையிலும் நிறைய நண்பர்கள், பெரிய, பெரிய பதவியில் இருப்பவர்கள் பழக்கம் அனைத்தும் குடி என்ற ஒன்றால் இழந்து, கடைசியில் குடியாலே என்னையும், என் இரு குழந்தைகளையும், ஏழு மாதங்களுக்கு முன் விட்டுச் சென்று விட்டார்.என் அம்மாவும், 21 வயதில் விதவையானவர்; நானும், 27 வயதில் விதவையானேன். எப்படி அம்மா இந்த கொடுமையை சொல்ல? நான் என் பிறந்த ஊருக்கே போகவில்லை, பயமாக இருக்கிறது.எல்லாரும், அதாவது என் தாய், மாமனார், மாமியார் (தாத்தா, அம்மாச்சி) உறுதுணையாக இருக்கின்றனர். மதுரையில் சொந்த வீட்டில் உள்ளோம். தாத்தா பென்ஷன் பணம், கொஞ்சம் வயக்காடு உள்ளது; வேறு வருமானம் இல்லை. இந்நிலையில், வைராக்கியமாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். இப்போது கம்ப்யூட்டர் கற்று வருகிறேன். நான், நல்லமுறையில் தான் இருக்கிறேன். ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் பயப்படுகின்றனர். 'சின்ன பொண்ணு, பாதுகாக்க முடியாது, மறு கல்யாணம் செய்து வைக்க வேண்டும்; அதுவும் சின்ன மாமாவுக்கே...' என்கின்றனர்.இப்போதுதான் பெரிய சிக்கல். சென்ற ஒன்றரை வருடத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பரின் மனைவியை கல்யாணம் செய்து, தனியாக ஓடி விட்டார் சின்ன மாமா. அந்த பெண்ணுக்கு, பத்து வயதில் மகன் இருக்கிறான். அந்த பெண்ணின் கணவர், அதிக குடி பழக்கத்தால் இறந்து போனார். அவள் கணவன், இறந்த மூன்றே மாதத்தில், கோவிலில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். வேறு வீடு பார்த்து தனியாக இருக்கின்றனர்.என் கணவர் இறந்த அன்று, சின்ன மாமா மட்டும் வந்து எல்லா வேலைகளையும் செய்து, முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்; திடீரென்று இறந்ததால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. அழுவதா, மற்ற வேலைகளை பார்ப்பதா? ஆனால், அவரை வீட்டுக்குள் வராதே என்று சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து தினமும் வீட்டுக்கு ஒரு மணி நேரமாவது வந்து, என் குழந்தைகளிடமும், அவரது அம்மாவிடமும் பேசிவிட்டு சென்று விடுவார்.இப்போது அம்மா, தாத்தா, அம்மாச்சி அனை வரும், 'மாமா கூட பேசு... அவ எப்படி சாமர்த்தியமா பிடிச்சு வச்சுருக்கா. மாமாவை விட்டா உனக்கு வேறு யாரு இருக்கா? எங்களுக்கோ வயதாகி விட்டது. எங்கள் பென்ஷனை நம்பியே பிழைக்க முடியுமா? அப்படி நீ வேலைக்குத்தான் போனாலும், நீ நல்ல பிள்ளையாகவே இருந்தாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். நீ யாருடன் சென்றாலும், இந்த உலகம் தவறாகவே பேசும். எனவே, நீ மாமாகிட்ட பேசு... அவன், ஒரு தாலியை மட்டும் உன் கழுத்தில் கட்டி விடட்டும். பிறகு, பார்த்துக் கொள்ளலாம்...' என்கின்றனர்.அம்மா... நான் என்ன செய்ய? இந்த சமுதாயத்தில் தனித்து வாழ முடியாதா? அப்படி கண்டிப்பாக ஒரு துணை வேண்டுமா? - இப்படி என்னென்னவோ தோன்றுகிறது. நாம் விரும்புவதை விட, நம்மை விரும்புகிறவர்களே மேல் என்று சின்ன மாமாவை வேண்டாம் என்று சொல்லியும் விட்டேன்; யாரும் கேட்டபாடில்லை. ஒன்றுமே புரியவில்லை. என் அம்மா, நான் பட்ட கஷ்டத்தை என் மகளும் அனுபவிக்கக் கூடாது; மறு திருமணம் செய்தே தீர வேண்டும் என்கிறார். சின்ன மாமாவே என்றால் ஊரே சந்தோஷப்படும்... குழந்தைகளும், நம் சித்தப்பாதானே என்பர். அவர் தாய், தந்தையும் சந்தோஷப்படுவர். வீடும் பிரிக்க வேண்டியதில்லை என்கின்றனர்.நான் குழப்பத்தில் உள்ளேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். நல்ல முடிவை தாருங்கள். நான் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதையும் தெரியப்படுத்தவும்.— இப்படிக்கு,உங்கள் அன்பு மகள்.அன்புள்ள மகளுக்கு —உன் சின்ன மாமாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உன் மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், நீயோ அவரை தொடர்ந்து விரட்டி அடித்திருந்திருக்கிறாய். கல்யாணப் பேச்சின் போது, அதை, மனதில் வைத்து, உன்னை மணந்து கொள்ள மறுத்து விட்டார் உன் சின்ன மாமா. பெரிய மாமாவை நீ மணந்து கொண்ட பின், உன் அழகு கூடியிருக்கிறது. அது, திருமணமான பெண்களின் பிரத்யேக அழகு. அப்போது, அவர் உன்னை சீண்டியிருக்கிறார். நீயும், உன் குடும்பத் தினரும் சேர்ந்து திட்டியிருக்கிறீர்கள். சின்ன மாமா உன்னிடமிருந்து விலகி, இன்னொருவன் மனைவியை மணந்து கொண்டார்.உன் சின்ன மாமாவுக்கு உன் மேல் காதல் இருந்திருக்கிறது. அவரது முரட்டுக் குணத்தால் அவரால் நளினமாக செயல்பட முடியவில்லை. உன்னை அவர் மணந்து கொள்ள மறுத்த போது, நீயும், இரு குடும்பத்தாரும் தன் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார்; அது நடக்கவில்லை. நீ அண்ணி ஆன பின்னும், உன்னை மறக்க முடியாமல் தவித்திருக்கிறார் அவர். உன்னிடம் முறையற்ற உறவு எதிர்பார்த்திருக்கிறார்; அதை, நீ துளியும் ஆதரிக்கவில்லை. மாற்றான் மனைவியை தேடிப் போய் விட்டார்.உன்னுடைய நினைவாலேதான் உன் சின்ன மாமா காலத்தே திருமணம் செய்து கொள்ளாமல், விட்டேத்தியாய் இருந்திருக்கிறார். உன் சின்ன மாமா ஸ்திரீலோலன் அல்ல. ஆனால், தன் முரட்டுத்தனமான குணத்தால், தனக்கு கிடைக்க வேண்டியவற்றை இழப்பவர்.உனக்கு உன் சின்ன மாமாவின் மீது ஈர்ப்பு இன்றைக்கும் இருக்கிறது. அண்ணனை மணந்து கொண்டபின், தம்பியின் மீதான ஈர்ப்பை குழிதோண்டி புதைத்து விட்டாய். கணவனின் மரணத்திற்கு பின், அந்த ஈர்ப்பு, குழியிலிருந்து வெளியேறி உயிர்ப்பாய் நடமாடுகிறது. உனக்கு பொருளாதார பாதுகாப்பு இருக்கிறது. ஆண் பாதுகாப்புதான் தேவைப்படுகிறது. அண்ணனின் ஈமக்கிரியைக்கு, முப்பதாயிரம் செலவு பண்ணி இருக்கிறார் தம்பி. தொடர்ந்து அண்ணனின் குழந்தைகளுடன் பேசும் சாக்கில் உன்னை தினமும் ஒரு மணிநேரமாவது பார்த்துவிட்டு போகிறார் அவர். சின்ன மாமாவின் மனைவி பற்றி நீ சொல்லும் வார்த்தைகளில் பொறாமை வழிகிறது. தற்போது உன் சின்ன மாமா உன்னை கண்ணெடுத்து பார்ப்பதும் கிடையாது; ஆறுதல் வார்த்தை பேசுவதும் கிடையாது என்றிருக்கிறாய். சின்ன மாமாவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள, உன் மனம் ஏங்குகிறது என்பதை அது காட்டுகிறது.சின்ன மாமா உன்னை முறைப்படி மணந்து கொள்ள மாட்டார்; மணந்து கொள்ள அவர் மனைவியும் விட மாட்டார். மனைவியின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறார் அவர். நண்பரின் மனைவியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த போதே தொடர்பை கத்தரித்து பின்னாளில் உனக்கும், உன் சின்ன மாமாவுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கலாம். நண்பரின் மரணத்திற்குப் பின் நண்பரின் மனைவியை கோவிலில் திருமணம் செய்து கொண்டார் உன் சின்ன மாமா; அது, செல்லத்தக்க திருமணம். இப்போது அந்த மனைவியின் அனுமதி இல்லாமல் உன்னை, உன் சின்ன மாமா மணந்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. திருமணமான அல்லது விதவையான இளம் தாய்மார்களைத் தான் உன் சின்ன மாமா விரும்புகிறார். மீதி வாழ்நாளில் இதுமாதிரியான எத்தனை பெண்களை ஆதரிப்பாரோ?சின்ன மாமாவை உனக்கு கட்டி வைக்கும் குடும்பத்தாரின் யோசனைக்கு சிவப்புக் கொடி காட்டு. மேலே படித்து, வேலைக்கு போ.பிரச்னையில்லாத, சிக்கலில்லாத, சட்டப்பூர்வமான ஆண் துணையைத் தேடிக் கொள்.தனித்து வாழ முடியாது மகளே... கண்டிப்பாக துணை வேண்டும். எந்த பொருளுக்கும் ஒரு நிழல் உண்டு என்பது பவுதீக விதி. ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒரு துணை வேண்டும் என்பது உயிரியல் கட்டாயம்.இரு மாமாக்களை தாண்டிய வெளி உலகத்துக்கு வா; சுதந்திரக் காற்றை சுவாசி; யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தன்னிச்சையான முடிவுகள் எடு. வாழ்த்துக்கள்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.