இது உங்கள் இடம்!
'மெமரி கார்டு' விபரீதம் உஷார்!சமீபத்தில், பஸ்சில் பயணம் செய்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர், கலாட்டா செய்தபடி வந்தனர். அப்போது, ஒரு மாணவன், தன் மொபைல்போனில், யாரோ ஒரு மாணவியிடம், 'ஏய்... நான் உன்கிட்ட கொடுத்த, 'மெமரி கார்டை' மொபைலில் போட்டு பாத்திடாதே... அது, என் நண்பனோடது. அந்த ராஸ்கல், அதில, 'பலான பிட்' படத்தை வச்சிருக்கானாம். அந்த பன்னாடை, இப்பத் தான் அதை என்கிட்ட சொன்னான். ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... தயவுசெய்து அதைப் பாத்திடாதே... நாளைக்கு வந்து அதை வாங்கிக்கறேன்...' என்று பலமுறை மன்னிப்பு கேட்டு, பேச்சை முடித்தான்.அவனது செயலை கண்ட நான், 'பரவாயில்லையே... இவன் ரொம்ப நல்ல பையன் போலிருக்கிறதே...' என்று நினைத்தேன்.அப்போது, அவனது நண்பர்கள், 'என்ன மேட்டருடா?' என்று கேட்க, அந்த மாணவன், 'டேய் மாப்ளே... இதெல்லாம், 'பிகரை' கவிழ்க்கிற டெக்னிக்குடா... பொண்ணுங்ககிட்ட, மெமரி கார்டில், 'பலான' படத்தை, 'டவுன்லோடு' செய்து கொடுத்துட்டு, 'அதை பாக்காதே'ன்னு 'பீலா' விட்டா கண்டிப்பாக அதை பாப்பாங்க. அப்புறம், ஈசியா நாம அவங்களை கவிழ்த்திடலாம்...' என்றான்.அப்போது தான் தெரிந்தது, அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று!ஆண் நண்பர்களிடம் பழகும் பெண்களே... உஷாரா இருங்க; மெமரி கார்டில், 'பலான' வெடிகுண்டு இருக்கும்!— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.சிங்கர்!சிறுவர்கள் பாடும், திரையிசை பாடல்கள் நிகழ்ச்சி, இப்போது, அனைத்து, 'டிவி' சேனல்களிலும் ஒளிப்பரப்படுகிறது.மழலை குரலில் அவர்கள் பாடுவதைக் கேட்கும் போது, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சில குழந்தைகளின் இசை ஞானமும், குரல்களின் வசீகரமும், உணர்ச்சி பாவனைகளும், நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. குரல் தேர்வுக்கு பிள்ளைகளுடன், பெற்றோரும் கடுமையான பயிற்சி மேற்கொள்கின்றனர்; இது, இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம்.ஆனால், தற்போது உள்ள பாடல்களில் பெரும்பாலானவை தரமானவை இல்லை என்றாலும், சில விரல் விட்டு எண்ணக்கூடிய, நல்ல பாடல்களும் இருக்கின்றன. பெற்றோரும், போட்டி நடத்தும், 'டிவி' சேனல்களும், தலைமை தாங்குபவர்களும் (நீதிபதிகள்) இத்தகைய நல்ல பாடல்களை தேர்வு செய்து, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.பிள்ளைகளின் எதிர்காலத்தில், பெற்றோரை தவிர, வேறு யாருக்கும் அதிகமான அக்கறை இருக்க முடியாது. அதனால், தன் பிள்ளை இறுதி சுற்றுக்கே சென்றாலும், ஏன், முதல் பரிசை தவற விடும் வாய்ப்பு ஏற்பட்டாலும், தரமற்ற பாடல்களை பாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், பெற்றோர்.ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட, நம் பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் மண்ணின் மகிமையை நிலைநிறுத்த, நம்மால் இயன்ற, சிறு உதவியாக இதைச் செய்யலாமே!பரிசு பொருட்களுக்காக ஒரு தலைமுறையினரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதை நிறுத்தி, எதிர்கால சிற்பிகளை, அழகான, உயிரோட்டம் உள்ள சிலைகளை வடிக்க உதவி செய்வது, நம் சமுதாய பொறுப்பு! செய்வீரா!— மு.தமிழரசி, சென்னை.இரவில் ரயில் பயணமா?இரவில், ரயிலில் பயணிக்கும் போது, 'இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விடுவோமோ...' என்ற கவலையும், பயமும் ஏற்படுகிறதா? இனி, அந்தக் கவலை வேண்டாம்.உங்கள் மொபைல் போனிலிருந்து, 139 என்ற எண்ணுக்கு, 'டயல்' செய்யுங்கள். அதில் வரும் வழிமுறைகளின்படி, பயண டிக்கெட்டில் இருக்கும் உங்கள் பி.என்.ஆர்., எண்ணை பதிவு செய்யுங்கள். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும், உங்களுக்கு, எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால், நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலையில்லாமல், நிம்மதியாக பயணம் செய்யலாம்!— ஹெச்.டி.முனவர் ஜஹான், மதுரை.