இது உங்கள் இடம்!
வீர மங்கை!சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஏலகிரி செல்லும், இரவு நேர கடைசி ரயிலில், குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தோம். எங்களுடன், சில கல்லுாரி பெண்களும் ஏறினர். 10 பேர் தான் இருந்தோம். வண்டி புறப்பட ஆரம்பித்ததும், சில இளைஞர்கள் ஓடி வந்து ஏறி, அப்பெண்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். ரவுடிகள் போல் இருந்த அவர்களின் ஆபாச பேச்சை, காது கொடுத்து கேட்க முடியவில்லை. வேறு பெட்டிக்கு செல்லவும் வழி விடவில்லை. ரவுடி கும்பலை தட்டிக்கேட்கவும், எங்களுக்கு பயமாக இருந்தது.பாட்டு பாடி, 'டான்ஸ்' ஆடியதுடன், அதில் ஒருவன், மேல் சட்டையை கழற்றி, 'ஆணும் - பெண்ணும் சமம். எங்கே என்னை போல், நீயும் செய் பார்க்கலாம்...' என்றான். ஒரு பெண் அழ ஆரம்பித்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, 50 வயது மதிக்கதக்க பெண் பயணி ஒருவர், 'திருவள்ளூர் 52, காவல் நிலைய கான்ஸ்டபிள் பேசறேன்... ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், கடைசி பெட்டிக்கு, ரயில்வே போலீஸ், 10 பேரை, உடனடியாக அனுப்ப சொல்லுங்கள். 'இங்கே, சில ரவுடிகள், பெண் பிள்ளைகளிடம் கலாட்டா செய்கின்றனர்...' என்று சொல்லி, முடிக்கும் முன்பே, அவர்கள் அனைவரும் திபுதிபுவென்று, அடுத்த பெட்டிக்கு தாவி, எங்கு ஓடினர் என்றே தெரியவில்லை. அப்பெண்ணிடம், 'எங்களை மாதிரி சாதாரண ஆளுங்களால, இந்த மாதிரி ரவுடிகளை ஒண்ணும் பண்ண முடியாது... போலீசுக்கு தான் இவர்கள் பயப்படுவர்... ரொம்ப நன்றி மேடம்...' என்றேன்.அப்பெண் சிரித்தபடியே, 'சார்... நான், போலீஸ்ன்னு யாரு சொன்னது... மழைக்கு கூட ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கினதில்லை... ரயில்வே ஸ்டேஷன் கேன்டீன்ல சமையல் வேலை செய்யறேன்... சும்மா, அவனுங்களை பயமுறுத்த, போலீஸ்ன்னு சொன்னேன்...' என்றார்.மேலும், அப்பெண்களைப் பார்த்து, 'ஏம்மா... படிக்கிற பொண்ணுங்க, தைரியமா இருக்க வேண்டாமா... நாலு பேரு சேர்ந்து எதிர்த்து நின்னா, காணாம போயிடுவான்க... 'இந்த மாதிரி நேரத்துல, வெளியில போயிட்டு வர பொண்ணுங்க, கையில மிளகாய் துாள் வெச்சுக்கணும்... வாழ்க்கையில், இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு... இதுக்கு போய் பயந்து, அழுதா எப்படி...' என்று சொல்லி, ஒன்றுமே நடக்காதது போல், ஓரமாக உட்கார்ந்து, பூ கட்ட ஆரம்பித்தார்.அந்த, வீரமங்கையை பார்த்து, அங்கிருந்த அனைவரும் வெட்கி தலை குனிந்தோம். - தேவ் பிரசாத், கோவை.குழந்தையின் துாக்கம் கெடுகிறது!சென்னையில், அடுக்கு மாடி குடியிருப்பில், புதிதாக குடிபெயர்ந்தேன். கீழ்தளத்தில், என் வீட்டிற்கு எதிரே, வயதான தம்பதியர் வசிக்கின்றனர்.மேல் தளத்தில் வசிப்போர், எங்கள் வீடுகளுக்கு இடையே உள்ள படிக்கட்டில் ஏறி தான், சென்று வர வேண்டும். அதற்காக, படிக்கட்டு அருகே, மின் விளக்கு உள்ளது.இரவில் எரியும் மின் விளக்கை, எதிர் வீட்டு முதியவர், விடியற்காலையில் அணைத்து விடுவார். இதனால், மேல் தளத்திலிருந்து இறங்கி வருவோர், அவரிடம், 'இதுக்கு, நாங்களும் தான், கட்டணம் செலுத்துகிறோம். எப்ப பார்த்தாலும், விளக்கை அணைத்து வைக்கிறீங்க...' என, சண்டை போடுவர்.ஒரு நாள், அவரிடம், 'மொத்தம், 10 வீடு இருக்கோம்... இதுக்கு, மின் கட்டணம் குறைவாக தான் வர போகுது... நாள் முழுதும் எரியட்டுமே... ஒரு வீட்டுக்கு, 20 ரூபாய் கூட வராதே...' என்றேன்.நீண்ட பெருமூச்சு விட்ட அவர், 'தம்பி... நான் கிராமத்துக்காரன்; சென்னை மாதிரி, அங்கே, எப்பவும் மின்சாரம் இருக்காது. இரவில், மின்சாரம் இல்லாம, எத்தனை குழந்தைகள், துாங்காமல் அழும் தெரியுமா... 'சென்னையில் உள்ளோர், அனாவசியமாக வீணாக்குற மின்சாரத்தை குறைத்துக் கொண்டால், கிராமத்துல இருக்குறவங்களுக்கு, அத்தியாவசிய தேவைக்கு கிடைக்கும். கிராமத்துல இருக்கிற, ஒரு குழந்தை, ராத்திரி நல்லா துாங்கும் பா...' என்றார்.இப்போதெல்லாம், வீட்டில் தேவையில்லாமல் எரியும் மின் விளக்குகளை அணைக்க, பழகி விட்டேன். உங்கள் வீட்டிலும், மின் தேவையை குறைத்துக் கொள்வீர்கள் தானே! சி. கலாதம்பி, சென்னை.இதை பின்பற்றலாமே!காலையில் நடைப்பயிற்சி செல்வோர், கூடவே, தங்கள் வளர்ப்பு பிராணியான நாயையும் அழைத்துச் செல்வர். போகிற வழியில், வளர்ப்பு பிராணிகள், தங்களின் காலைக் கடனை முடித்துக் கொள்வதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.காலையில், வீட்டை விட்டு கிளம்புவோர், இவைகளை மிதிக்காமல் செல்ல முடியாத அளவுக்கு, தெருக்களில், பிராணிகளின் எச்சங்கள் இருக்கும்.எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி, தன் வீட்டு நாயுடன் நடைப்பயிற்சி செல்வார். கூடவே, அப்பெண்ணின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணும், கையில் ஒரு அட்டை, 'கேரி பேக்' மற்றும் துடைப்பத்துடன் செல்வாள். என் வீட்டருகே நாய் வந்தபோது, 'கக்கா' போனது. உடனே அப்பணிப்பெண், தான் வைத்திருந்த அட்டையை வைத்து, நாயின் எச்சத்தை அள்ளி, சுத்தம் செய்து கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும், முறுவலுடன், 'நம் வளர்ப்பு பிராணியால், அடுத்தவங்க வீட்டு வாசல் மற்றும் தெரு அசுத்தம் ஆக கூடாது. எனவே, நாயை வெளியில கூட்டி போனா, கூடவே ஒரு அட்டை மற்றும் ஒரு, 'கேரி பேக்'கை எடுத்து வரச் சொல்வாங்க, எஜமானி அம்மா...' என்றார்.பாரதத்தை துாய்மை படுத்தும் முயற்சியில், தங்களின் சிறு பங்காக, நாய் வளர்ப்போர் இச்செயலை ஏற்று செய்யலாமே.— எஸ். ரேவதி, சென்னை.