மணப்பெண்ணின் நேர்மை!
சமீபத்தில், என் நண்பனுக்கு, பெண் பார்க்க சென்றிருந்தோம். எல்லாருக்கும் காபி கொடுத்த மணப்பெண், எடுத்த எடுப்பிலேயே, நேரடியாகவே ஒரு விஷயத்தை போட்டுடைத்ததை கண்டு, அதிர்ந்து போனோம்...'என் அனுமதியையோ, விருப்பத்தையோ கேட்காமல், பெற்றோர் அவசரப்பட்டு இந்த ஏற்பாட்டை செய்து விட்டனர்; அதற்காக, உங்களிடம், முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.'கல்லுாரியில் படிக்கும்போதே, கர்ப்பப் பையில் நோய் தொற்று இருப்பதை அறிந்து, அகற்றி விட்டனர். திருமணம் செய்து கொண்டால், உங்கள் குடும்பத்திற்கு வாரிசை பெற்றுத்தரும் பாக்கியம் எனக்கில்லை. 'இதை மறைத்து, உங்களுக்கு முதல் தாரமாக வாழ்க்கைப்படும் ஆசை எனக்கில்லை. கைக் குழந்தையோடு கஷ்டப்படும் ஒருவருக்கு, இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முடிவு செய்துள்ளேன். 'என் பெற்றோரின் வற்புறுத்தலால், இந்த உண்மையை சொல்லாமல் திருமணம் செய்து, புகுந்த வீட்டுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய என்னால் முடியாது...' என, உறுதிபட கூறினாள், அப்பெண்.அவள் நேர்மைக்காகவே, அவளின் எண்ணப்படி வாழ்க்கை அமைய வேண்டும் என, வாழ்த்தி திரும்பினோம்.
- டி. சரவணன், விழுப்புரம்.ஆபத்து காலத்திற்கு, 'காவலன் ஆப்!'
பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும், 'காவலன் ஆப்'பை பதிவிறக்கம் செய்தேன். பதிவிறக்கம் செய்யும்போது, நம், 'பர்சனல்' தகவல்கள் கேட்கப்பட்டன. விபரங்களை கொடுத்ததும், நமக்கு ஆபத்து வரும்போது, தெரியப்படுத்த விரும்பும் மூன்று பேரின் விபரங்கள் கேட்கப்பட்டன. அம்மா - அப்பா மற்றும் அக்காவுடைய தகவல்கள், உறவு முறை மற்றும் தொலைபேசி எண்ணும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்த பின், 'ஆப் டவுண்லோடு' என்ற செய்தி வந்ததும், எஸ். ஓ. எஸ்., என, ஒரு, 'லோகோ' வந்தது. அதன்பின், வேறு ஏதாவது வருகிறதா என, 'டச்' செய்தது தான் தாமதம், அந்த நொடியில், அம்மா, அக்கா மொபைலுக்கு, 'மெசேஜ்' வரும் ஒலியுடன், என் போனில் அதிர்வுடன், பேச அழைப்பு வந்தது. எண், 100ஐ பார்த்தவுடன், 'குப்'பென்று வியர்த்தது. 'இவ, இங்க தான இருக்கா... இது என்ன மெசேஜ்...' என்று கேட்டார், அம்மா. ஒரு வழியாக, தைரியத்தை வரவழைத்து, எடுத்து பேசினேன். எதிர்முனையில், 'நாங்க, சென்னை, 'கன்ட்ரோல்' அறையில் இருந்து பேசறோம்... என்ன ப்ராபளம்...' என, கேட்டனர். நடந்த அனைத்தையும் சொல்லி, வருத்தம் தெரிவித்தேன்.'இட்ஸ் ஓ.கே.,மா... ஏதாவது பிரச்னைன்னா, அந்த, 'லோகோ'வை, 'டச்' பண்ணினா போதும், எங்க உதவி கண்டிப்பா இருக்கும்...' என்றனர். பயத்தில் நடுங்கினாலும், மிக மகிழ்ச்சியாக இருந்தது. வேதனை என்னவென்றால், இதுபற்றி நிறைய பேருக்கு தெரிந்தும், 'ஸ்மார்ட் போன்' வைத்திருந்தும், இதை, 'டவுண்லோடு' பண்ணவில்லை என்பது தான்.வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொருவரும், இந்த காவலன் செயலியை பதிவிறக்கம் செய்தால், ஆபத்து காலத்தில், உதவ முடியும் என்று நம்புகிறேன். பயனுள்ள இந்த செயலியை, பெண்கள், அலைபேசியில் உடனடியாக, 'டவுண்லோடு' செய்து கொள்ள வேண்டுகிறேன்.
பிரியா, கோவை.குடும்ப, 'பாஸ்வேர்ட்' என்ன?
சமீபத்தில், பெங்களூரில் வசிக்கும், சினேகிதி வீட்டிற்கு சென்றிருந்தேன். அவளின், 8 வயது மகள், பள்ளிக்கு சென்றிருந்தாள். மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளியின் வெளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அவளிடம், அறிமுகம் இல்லாத ஒருவர், 'உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை. உன்னை, உடனே வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொன்னாங்க; என் கூட வா...' என, அழைத்திருக்கிறார்.அச்சிறுமி, 'எங்க குடும்ப, 'பாஸ்வேர்டை' சொல்லுங்க...' என்று, கேட்டிருக்கிறாள்.இதை எதிர்பார்க்காத, அந்த நபர், 'திரு திரு'வென விழித்துள்ளார். உடனே, அந்த சிறுமி, வகுப்பறைக்கு ஓடி, 'யாரோ ஒரு அங்கிள், என்னை கூப்பிடறாரு மிஸ்...' என்று, வகுப்பு ஆசிரியரிடம், புகார் செய்தாள்.உடனே அவர், வெளியே ஓடி வர, மிரண்டு போன, மர்ம நபர், ஓட்டம் பிடித்தான். எல்லாரும் சேர்ந்து, அவனை விரட்டிப் பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர்.இதன் பின் நடந்தது தான், 'ஹைலைட்!' அந்த புத்திசாலி சிறுமியின் அம்மாவை, பள்ளி நிர்வாகம் கூப்பிட்டு, 'அதென்னங்க குடும்ப பாஸ்வேர்டு...' என்று கேட்டது.'அறிமுகமில்லாத நபர், யார் வந்து கூப்பிட்டாலும், நாங்க ரகசியமா பேசி வச்சிருக்கிற, 'பாஸ்வேர்டை' சொன்னா தான், அவங்க கூட வரணும். இது, நானும், என் பொண்ணும் போட்டு வெச்சிருக்கிற பிளான்...' என்று, சொல்லியிருக்கிறாள்.அப்பள்ளி நிர்வாகம், மற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடமும், 'நீங்களும், இதையே, 'பாலோ' பண்ணுங்கள்...' என்று, கடிதம் அனுப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.எல்லா பள்ளிகளும், இதை பின்பற்றலாமே!
எஸ். பிரேமாவதி, சென்னை.