அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு -நான். 58 வயது பெண்மணி. கணவர் வயது: 63. எங்களுக்கு, நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மருமகள்களும் என் மீது அன்பாக இருக்கின்றனர்.கணவர், நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். சொந்த வீடு, உற்றார், உறவினர் என்று நிம்மதியாக போய் கொண்டிருந்தது வாழ்க்கை.எனக்கு, 40 வயதிலிருந்தே, சர்க்கரை நோய் உள்ளது. அதற்காக, தொடர்ந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நோயால் அதிக பாதிப்பு இல்லாவிட்டாலும், ஞாபக மறதி ஏற்பட்டு விட்டது. என் மறதி நோயால், பலரது கிண்டலுக்கு ஆளாகி வருகிறேன்.சமயத்தில், கணவரின் பெயர், மகன்களின் பெயர் கூட மறந்து விடுகிறது. பேர பிள்ளைகளின் பெயர். அவர்கள் என்ன படிக்கின்றனர் என்று கூட நினைவில் இருப்பதில்லை.எங்காவது வெளியே சென்றால், திரும்பி வர வீட்டு முகவரி மறந்து விடுகிறது. ஒருமுறை, கோவிலுக்கு சென்றேன். கோவிலுக்கு, இரண்டு தெரு தள்ளித்தான் வீடு. ஆனால், வழி மறந்து விட்டது. காலை 8:00 மணிக்கு சென்றவள், காலை 11:00 மணி வரை தெரு தெருவாக சுற்றியிருக்கிறேன்.என் கணவரின் நண்பர் பார்த்து விட்டு, தன் ஸ்கூட்டரில் ஏற்றி, வீடு வரை வந்து விட்டு சென்றார். அதற்குள் என்னை காணவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் பதறி, அங்கும் இங்கும் தேடி அலைந்துள்ளனர். அதிலிருந்து, என்னை தனியே எங்கும் அனுப்புவதில்லை.என் நிலையின் தீவிரம் புரிந்து, என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தலையை, 'ஸ்கேன்' செய்து பார்த்ததில், என் மூளையின் திசுக்கள் குறைந்து விட்டதாகவும், மூளை சுருங்கி விட்டதாகவும், சாதாரணமாக 80 வயதில் வர வேண்டிய மறதி நோய், எனக்கு இப்போதே வந்து விட்டதாக கூறினர். மகுந்து, மாத்திரை கொடுத்து, சாப்பிட சொன்னார், டாக்டர். சில பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்துள்ளார். நிறைய படிக்கவும், பார்க்கும் பொருட்களின் பெயர்களை திரும்ப, திரும்ப சொல்லி பார்க்கவும், குறுக்கெழுத்து, சுடோகு போன்ற பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினார்.நானும், பெரு முயற்சி செய்து பயிற்சி எடுத்து வருகிறேன். ஆனாலும், காலையில் என்ன சாப்பிட்டோம் என்று கூட மறந்து விடுகிறது.இந்த கடிதம் கூட, நான் சொல்லி. என் கணவர் தான் எழுதியுள்ளார். இதனால், வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக, என் கணவர் மிகவும் கவலை அடைந்துள்ளார். அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுகிறேன்.சீக்கிரம் இறந்து விட கூடாதா என்று தோன்றுகிறது. இதிலிருந்து மீள என்ன செய்யட்டும், சகோதரி,- இப்படிக்கு, உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு -பொதுவாக, 65 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு தான் மறதி நோய் ஏற்படும். இந்தியாவில், 88 லட்சம் மறதி நோயாளிகள் வாழ்கின்றனர். இது, முதியோர் ஜனத்தொகையில், 7.4 சதவீதம், உலக அளவில், 5 கோடி மறதி நோயாளிகள் உள்ளதாக கூறுகிறது. ஒரு ஆய்வு.மறதிநோய், மூன்று வகைப்படும். அவை:* டிமென்சியா (முதுமை மறதி)* அல்ஜைமர் நோய் (அறிவாற்றல் இழப்பு நோய்)* பார்கின்ஸன் நோய் (நடுக்கு வாதம்)மறதிநோய், வயோதிகம், மரபணு காரணிகள், உயர் ரத்த அழுத்தம், மிகை கெட்டக்கொழுப்பு, மூளைக்காயங்கள். உடல் உழைப்பின்மை, விட்டமின் குறைபாடு மற்றும் வேறு நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் ஆகியவை காரணமாகிறது.மறதி நோயைக் கண்டு, நீ பயப்படவோ, சுயபச்சாதாபப்படவோ தேவையில்லை. எந்த நோயையும் கட்டண விருந்தாளியாக பாவித்து வாழலாம்.ஒரு விஷயத்தை கவனமில்லாமல் அலட்சியமாக செய்தால், அந்த விஷயத்தை எளிதில் மறந்து விடுகிறோம். மறதி பல விஷயங்களில், வரம். சில விஷயங்களில், சாபம்.மறதி நோயை கச்சிதமாக நிர்வகிக்க சில. 'டிப்ஸ்'கள் தருகிறேன்.* தினசரி செய்யும் அன்றாட பழக்கவழக்கங்களை அட்டவணைப்படுத்து. உன் அறையில் ஒரு நாட்காட்டியை தொங்கவிட்டு அல்லது போர்டு ஒன்று மாட்டி அதில் குறித்து வைக்கலாம்* சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை, பண பரிவர்த்தனைகளை குறிப்பிடவும். செய்ய வேண்டிய வேலைகளை சிறுசிறு பகுதிகளாக பிரி* தினம் இரவில், அன்று நடந்ததை, 'ரீ-வைண்ட்' பண்ணி நினைவுகூர்* நடைப்பயிற்சி, தோட்டக்கலைகளில் ஈடுபடு, புத்தகம் படி, புதிர்கள் விடுவி* தினம் ஊட்டச்சத்து நிபுணர் அட்டவணைப்படி சாப்பிடு* சக மனிதர்களிடம் ஒதுங்கி நிற்காமல், அன்பு பாராட்டு, உன் மறதி பிரச்னையை உன் நெருங்கிய வட்டத்தினரிடம் கூறி, தார்மீக ஆதரவு பெறு* உன் தகவல் தொடர்பை எளிமைப்படுத்து* உன்னைச்சுற்றி ஒரு பாதுகாப்பு மண்டலம் அமைத்து, ஆபத்துகள் இல்லாமல் உலவு* இந்திய அளவில் மறதி நோய்க்கான தொண்டு நிறுவனம் உள்ளது. அதன் மின்னஞ்சல் முகவரி ardsinationaloffice@gmail.com. மொபைல் எண்: 8585990990 தொடர்பு கொண்டு ஆலோசனை மற்றும் உதவி பெறலாம்* ஜிங்கோ பைலோபா, ஓமேகார, விட்டமின் 3 மற்றும் விட்டமின் பி போன்ற துணை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.என்றென்றும்,சகுந்தலா கோபிநாத்.