உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு, நான், 77 வயது முதியவள். கணவர் வயது, 86. ரயில்வே பணியிலிருந்து ஓய்வுபெற்று, தற்போது ஓய்வூதியமாக மாதம், 35 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சொந்தமாக வீடு கிடையாது. வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகள். பி.காம்., படித்தவுடன், திருமணம் செய்து வைத்தோம். தற்போது வசதியாக, சொந்த வீட்டில் வசிக்கிறாள். அவளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாப்பிள்ளை நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு வகையில் எனக்கு உறவு. வயது மூப்பு காரணமாக கடந்த, ஐந்து ஆண்டுகளாக தோல் அலர்ஜியால் கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெற்றும் பயன் இல்லை. இதை புரிந்து கொள்ளாத என் கணவர் என்னை அடிக்கடி, 'டார்ச்சர்' செய்வதோடு, வெளிமனிதர்கள் முன் என்னை அவமானப்படுத்துகிறார். இந்த தள்ளாத வயதிலும், அவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்து வருகிறேன். இதைத் தவிர, என் கணவர் பணத்தாசை பிடித்து, வட்டிக்கு பணம் கொடுத்து, பலரிடம் ஏமாந்து விட்டார். எவ்வளவோ புத்திமதி கூறியும், ஏற்காமல் கையில் கிடைத்த பொருளால் என்னை அடித்து துன்புறுத்துகிறார். முன் கோபி. என் சொந்தபந்தங்கள் யாரும் எங்களை பார்க்க வருவதில்லை. கடந்த, ஆறு மாதங்களாக பெற்ற மகளிடமே பேசுவதில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் பேசுவதில்லை. யாரிடமும் பேசக்கூடாது என, நிபந்தனை விதித்துள்ளார். நான் ஆன்மிகத்தில் பற்று கொண்டவள். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, என்னால் இயன்ற உழவார பணி செய்து, மன நிம்மதி கொள்கிறேன். அதற்கும் தடை விதித்து விட்டார், என் கணவர். அழகான பெண்களை கண்டால், 'ஜொள்ளு' விட்டு, அவர்களுக்கு உதவி செய்வதுமாக இருக்கிறார். நான் அவருடன் எங்கும் வெளியில் செல்வது கிடையாது. இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். எனக்கு எந்த உதவியும் செய்வது கிடையாது. காலை எழுந்தது முதல், இரவு வரை, 'டார்ச்சர்' தான். நானே தனியாக மருத்துவமனைக்கு செல்கிறேன். கை செலவுக்கு கூட சரிவர பணம் கொடுப்பது இல்லை. தற்கொலை செய்து கொள்ள துாண்டுகிறது, என் மனம். மேலும், அந்தகால புதுமுக வகுப்பான, பி.யு.சி., வரை படித்துள்ளேன். என் கணவர், பத்தாம் வகுப்பு வரை கூட படிக்கவில்லை. ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். திருமணத்திற்கு முன் தனியார் பள்ளியில் நுாலகராக பணியாற்றினேன், நான். அவர் பென்ஷனில் எனக்கு பங்கு உண்டு. சிறுசேமிப்பு மற்றும் வங்கி சேமிப்பில், நாமினியாக என் பெயரும், என் மகள் பெயரும் இருக்கிறது. கணவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. என்ன செய்வது? நல்ல முடிவாக கூறுங்கள், சகோதரி. — இப்படிக்கு, உங்கள் சகோதரி. அன்பு சகோதரிக்கு, சாதாரணமாகவே, ஆண்கள், 70 வயது தாண்டி விட்டால், 'ஈகோ' சாத்தான் ஆகி விடுகின்றனர். பைத்தியக்கார குரங்குக்கு, தேள் கடித்தது போல, ஓய்வூதிய பணத்தை வைத்துக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர், சிலர். அவர்களின் சர்வாதிகாரம், மனைவி எனும் கொத்தடிமையிடம் கொடி கட்டி பறக்கிறது. போருக்கு போகும் முன், கணவரிடம் சமாதான உடன்படிக்கை போட முடியுமா என பார், சகோதரி... கணவரிடம் மனம் விட்டு பேசு. மாதம், 10 ஆயிரம் ரூபாய் உனக்கு பராமரிப்பு தொகை கொடுக்கச் சொல். உன்னை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து போய், தோல் நோய்க்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள செய். யாருக்கும் எந்த சிறுதொகையும் வட்டிக்கு விடக்கூடாது என, நிபந்தனை விதி. மகளிரிடம் நாகரிகமாக நடந்து கொள்ள வற்புறுத்து. பொதுவெளியில் உன்னிடம் கண்ணியக் குறைவாய் நடக்கக் கூடாது என, கண்டிப்பு வை. 'இதெல்லாம் நீ என்ன எனக்கு சொல்வது, நான் என்ன கேட்பது...' என, உன் கணவர் உன்னிடம் சண்டை இழுக்கக் கூடும். இப்போது, கியரை மாற்றிப் போடு. நீ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்ப்போம். குடும்ப நல நீதிமன்றத்தில் அல்லது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் நீ, உன் கணவரின் மீது மனுதாக்கல் செய்யலாம். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, கணவரின் ஓய்வூதியத்திலிருந்து பராமரிப்பு தொகையை பிடித்தம் செய்ய சட்டத்தில் இடமுண்டு. உன்னை, உன் கணவர் பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது கூட குடும்ப வன்முறை தான். அதை நிரூபித்தும் நிதி நிவாரணம் பெறலாம். நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும், உன் கணவர் பணம் தரவில்லை என்றால், அவரது ஓய்வூதிய பணத்தை முடக்கி, அதிலிருந்து உனக்கான பணத்தை நீதிமன்றம் வழங்கும்.வழக்கு முடியும் வரை காத்திருக்காமல் உடனடியாக செலவுகளுக்கு பணம் பெற இடைக்கால பராமரிப்பு தொகை கோரி மனு செய்யலாம். தொகை கிடைக்கும். நீதிமன்றத்தில் வழக்கு பதிய தேவைப்படும் ஆவணங்கள். * திருமணத்திற்கான ஆதாரம் (திருமண புகைப்படம் அல்லது அழைப்பிதழ்) * கணவரின் ஓய்வூதிய விபரம் * உன்னுடைய மாதாந்திர செலவுகள். பிறகு, உன் கணவரின் அழிசாட்டியம் அடங்கும். நீ போடும் வழக்கு உன்னைப் போல துன்பப்படும் பாட்டிகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்க வைக்கும். வாழ்த்துகள். — என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Purushothaman.N,Kuwait.
ஏப் 29, 2026 15:11

Very good suggestion. Thanks and Great.


Anand
ஏப் 25, 2026 16:58

பொறுமையாக இருங்கள், காலம் கனியும் நீங்கள் வணங்கும் தெய்வம் துணை நிற்கும்.


Venkataramanan Kannan
ஏப் 21, 2026 20:47

அதி புத்திசாலி.


V.Rajan
ஏப் 20, 2026 10:37

அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வரும் பெண்சன் பணத்தால் வரும் பிரச்சினை இது. பெண்சன் வாங்காமல் வாழும் முதியோர் எத்தனை பேர் உள்ளனர். என்னுடைய யோசனை என்னவென்றால் பெண்சன் பணத்தை கட் செய்தாலே போதும் பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.


Kamaraj TA
ஏப் 20, 2026 08:34

இந்த மாதிரி வயசான காலத்தில் ஆண்கள் அசிங்கமாக நடந்து கொள்வதும், பெண்களைக் கொடுமைப்படுத்துவது போல சொல்வதும் கதைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். உண்மையில் வயதான காலத்தில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் துணையாகத்தான்இருக்கின்றனர். தேவையில்லாத கற்பனைக் கதைகளைப் போடுகின்றனர்.


NeelaXanthum
ஏப் 19, 2026 21:04

நீதி மன்றம் போவது எல்லாம் இந்த மாதிரி காலம் காலமாக அடக்கம் ஒடுக்கம் என்கிற கூண்டில் இருந்தவர்களுக்கு இயலாது. அந்த கணவரின் நடவடிக்கை இந்த பெண்மணி போன்றவர்கள் அனுமதித்தால் வந்தது தான். இந்த பெண்மணி சொல்லுகிறார் அவர் கணவர் இவரின் பொழுது போக்குகளுக்கு தடை போடுகிறார் என்று. மூலையில் ஒடுங்கி இருந்தது இதுவரை சௌகரியமாக இருந்தது இப்போது கடிக்கிறது. பேசாமல் ஒரு முதியோர் இல்லத்தில் போய் தனி ஆளாக சேர்ந்துவிடுவது நல்லது. அதுவும் வேறு ஒரு ஊரில். அதற்கு பெண்மணியின் மகள் உதவி தேவை. Separation தாக்கல் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஒருபக்கம் இப்படி சொல்லிவிட்டு மறுபக்கம் மணாளனே மங்கையின் பாக்கியம் என்று dilly dally செய்யக்கூடாது. சுத்தமாக கழற்றி விட்டு செல்ல வேண்டும்.


Rathna
ஏப் 19, 2026 18:18

86 ம் 77 ம் கோர்ட்டுக்கு போனால் நாட்டு மற்றும் கோர்ட் நிலவரப்படி 196 வருடம் கழித்து முடிவு வரும். பரவாயில்லையா.


Muthu Kumar
ஏப் 19, 2026 16:33

காலம் போன கடைசில தெல்லாம் தேவையா இப்படி எல்லாம் கூத்த நான் எங்கயும் பார்த்ததில்லை


Anand
ஏப் 25, 2026 17:01

காலம் போன கடைசியில் இதுபோல நிறைய பெருசுகள் கூத்து கட்டிக் கொண்டு இருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று ஆளுக்கொரு அடுப்பில் தனி தனியே சமைத்து உண்டு வாழ்வதும் காணலாம்.


M Selvaraaj Prabu
ஏப் 19, 2026 14:12

இந்த அம்மா பி யு சி என்றும், கணவன் 10 தாவது கூட இல்லை எனும் போதும், ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தினால் வேலைக்கு போனார் என்பதிலிருந்தும் இவர் கணவனை எப்படி நடத்துவார் என்பது தெரிகிறது. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கும் ஏறக்குறைய இதே கதைதான். சுமார் 8 வருடங்களுக்கு முன்பு கேஸ் போட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. திரு சகுந்தலாவுக்கு ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது தெரியுமா? எனக்கு என்னமோ இந்த பதிவு யாரோ பொழுது போகாமல் எழுதியதற்கு, இவரும் பொழுது போகாமல் பதில் எழுதியிருப்பது போல உள்ளது.


Sivak
ஏப் 20, 2026 15:26

77 வயதில் தன் கணவரை கேவலமாக பேசும் இந்த கிழவி எப்படிப்பட்ட வாழ்வை தன் கணவரோட வாழ்ந்திருப்பாள் என்பது புரிகிறது ... இவளுக்கு அந்த 86 ஆற்றும் எதிர்வினை தான் ... இந்த கிழவி தன் இளம் வயதில் என்னென்ன ஆட்டம் போட்டிருப்பாள் ... இந்த வயதில் நீதிமன்றம் போக சொல்லி கேவலமான அறிவுரை ... 40 வயது ஆனவுடன் நெறைய பெண்கள் மனநலம் பாதிக்க பட்டு பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் ...


Natarajan Ramanathan
ஏப் 19, 2026 11:12

அறிவுரை சப்பென்று இருக்கிறது, வழக்கமான அறிவுரைபோல் ... தலையில் கல்லைப்போடு ...என்று இருக்க வேண்டாமா?