உள்ளூர் செய்திகள்

பருத்தியில் அமெரிக்கன் காய்ப்புழு

பருத்திப் பயிரில் அமெரிக்கன் காய்ப்புழு எனப்படும் பச்சைக் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா, என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். காய்ப்புழு தாக்குதலுக்குள்ளான பூ மொட்டுகள் விரிந்து பின்னர் விழுந்து விடும். நோய் பாதித்த இடங்களில் வட்ட வடிவமான துளை காணப்படும். துளைகள் எச்சத்தினால் அடைக்கப்படாமல் சுத்தமாக காணப்படும். துளையின் கீழ் உள்ள புல்லி வட்ட இதழ்களில் புழு வெளியேற்றிய கழிவுகள் தென்படும். அதாவது எச்சத்தினை காணலாம். தழைச்சத்து உரம் அதிகப்பட்டு செழித்து அடர்ந்து வளர்ந்த பயிரில் அமெரிக்கன் காய்ப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கும்.காய்ப்புழுவினை கட்டுப்படுத்த 'புரோபினோபாஸ்' (2 மில்லி / லிட்டர் தண்ணீர்) அல்லது 'ஸ்பின்னோசாடு' (0.5 மில்லி / லிட்டர் தண்ணீர்) மருந்தினை பயன்படுத்தலாம். பயிரின் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் மருந்து தெளித்தால் புழு நல்ல முறையில் கட்டுப்படுவதோடு, நன்மை தரும் பூச்சிகள் பாதுகாக்கப்படும்.- முனைவர். ரா.விமலாபேராசிரியர் மற்றும் தலைவர் பருத்தி ஆராய்ச்சி நிலையம் ஸ்ரீவில்லிபுத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !