நெல்லில் பாக்டீரிய இலைக்கருகல் நோய்
தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலையால் நெற்பயிரில், பாக்டீரிய இலைக்கருகல் நோய் பரவலாக காணப்படுகிறது.நோயின் ஆரம்பநிலையில், லேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள், இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுவதால், இலைகள் காய்ந்து விடுகின்றன. நோய் தீவிரமானால், புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை, இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.தூர் கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் நோய் உண்டாகும். நோய் தாக்கினால், இலைகள் மஞ்சள் நிறமாகி பின்னர் கருகியது போலாகும். நோய் முற்றிய நிலையில், அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு, பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும். 'சூடோமோனஸ் புளூரசன்ஸ்' என்ற எதிர் உயிர்க்கொல்லி மருந்தைக் கொண்டு, ஈரவிதை நேர்த்தி செய்ய வேண்டும். 60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் மருந்தை கலந்து, 60 கிலோ விதையை, ஒருநாள் முழுக்க ஊறவைக்க வேண்டும். அதன் பின், முளைகட்டி நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.நடவுக்கு முன்பாக, நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களை பிடுங்கி, அதன் வேர்களை மருந்து கரைசலில், ஹெக்டேருக்கு இரண்டரை கிலோ வீதம் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று அல்லது நான்கு முறையாக பிரித்து, மேல் உரமாக இடவேண்டும். யூரியா 5 மடங்கு, ஜிப்சம் 4 மடங்கு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஒரு மடங்கு விகிதத்தில் கலந்து, ஒரு நாள் வைத்திருந்து மறுநாள் மேல் உரமாக இடலாம்.விதை நேர்த்தி, நாற்று வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40, 50வது நாட்களில் இலைவழியாக, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மருந்து கரைசல் தெளித்தல் முறைகளில், பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன், எக்டேருக்கு 'ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்' 300 கிராம், 'காப்பர் ஆக்ஸிகுளோரைடு' 1250 கிராம் என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.-ம.முத்தமிழன், பயிர் நோயியல் துறைத் தலைவர், பேராசிரியர்கள் ஐ.இயேசுராஜா, ரா.விமலா, ந.ரேவதி, மதுரை விவசாயக் கல்லூரி.