உள்ளூர் செய்திகள்

மாவில் தத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள்

தோட்டங்களில் மா தற்போது பூத்து உள்ளதா, மா இலைகள் பகல் வெயிலில் பளபளவென்று எண்ணெய் தேய்த்து விட்டது போல் மினுமினுப்பாக உள்ளதா, என நன்கு கவனிக்க வேண்டும். மினுமினுக்கும் இலைகளை தொட்டு பார்த்து தேன் தெளிக்கப்பட்டது போன்று பிசுபிசுப்பாக உள்ளதா, என உற்று கவனிக்க வேண்டும். அப்படி இலைகள் மினுமினுப்புடனும், பிசுபிசுப்பாகவும் காணப்பட்டால், இந்த இலைகளுக்கு மேலுள்ள பூங்கொத்துகளை, மா தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பூங்கொத்துகளை உற்று நோக்கினால் சிறிய பழுப்பு நிறமுள்ள, பக்கவாட்டில் நகரக்கூடிய தத்துப்பூச்சிகளை காணலாம்.தத்துப்பூச்சியின் சேதம்மா தத்துப்பூச்சிகள் முட்டைகளை இளங்குருத்துக்கள், பூங்கொத்துகள், இலைகளின் காம்புகளில் துளைத்து வைக்கின்றன. இதனால் முட்டை உட்செலுத்தப்பட்ட பகுதிக்கு மேற்பகுதி வாடிக் கருகிவிடும். மேலும், முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த தத்துப்பூச்சிகள் இலைக்குருத்து மற்றும் பூங்கொத்துகளின் சாற்றினை உறிஞ்சுகின்றன. இதனால், பூங்கொத்துகள் வலுவிழக்கின்றன. தாக்குதல் தீவிரப்பட்டால், பூ மொட்டுகள், பூக்கள், இளம் பிஞ்சுகள், காய்கள் உதிர்கின்றன. மேலும் இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன்பாகு போன்ற கழிவுகள் இலைகளின் மீது படிந்து கரும்பூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது. நெருக்கி நடப்பட்ட தோப்புகளில் சேதம் விரைந்து பரவும், மல்கோவா, நீலம், செந்துாரம் போன்ற மா ரகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். பெங்களூரா, சப்பட்டை எனப்படும் பங்கனப்பள்ளி அல்லது பனேசன் ரகங்களில் தாக்குதல் சற்று குறைந்து காணப்படும்.கட்டுப்படுத்தும் முறைமுடிந்தவரை பாதிப்புக்குள்ளான, பூங்கொத்துகளை கவாத்து செய்து அகற்றி எரித்து அழிக்க வேண்டும். காய்ந்த சருகுகளை தீயிட்டு புகை மூட்டம் செய்து தாக்குதலை ஓரளவு குறைக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி பாசலோன் அல்லது இரண்டு கிராம் அசிப்பேட் அல்லது ஒன்றே கால் மில்லி மானோகுரோட்டோபாஸ் கலந்து ராக்கர் தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம். மாலை நேரத்தில் தெளிப்பது நல்ல பலன் தரும். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு அரை மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு பயன்படுத்தலாம்.- முனைவர் எம்.குணசேகரன்தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !