முட்டைப்பழம் சாகுபடிநுட்பங்கள் -நவீன தொழில்நுட்பம்
முட்டைப்பழம் மக்களிடையே அதிகம் பிரபலமடையாத ஒரு சிறுபான்மை வகை பழமாகும். இதன் தோற்றமும் சதைப்பற்றின் தன்மையும் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை ஒத்திருப்பதால் இப்பழமானது 'முட்டைப்பழம்' என்று அழைக்கப் படுகிறது. பவுட்டீரியா கம்பீசியானா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட முட்டைப்பழம் சப்போட்டேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். எப்பொழுதும் பசுமையுடன் காணப்படும் முட்டைப்பழமரம் நேராக சுமார் 7 முதல் 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அடித்தண்டின் சுற்றளவு ஒரு மீட்டர் வரை காணப்படும். இளம் காய்கள் பச்சை வண்ணமுடனும், நன்கு முதிர்ந்த காய்கள் ஆரஞ்சு கலந்த மஞ்சள் வண்ணமுடனும் காணப்படும். பழத்தின் சதைப்பகுதி மிருதுவாகவும் ஆரஞ்சு நிறத்துடனும் நல்ல இனிப்பாகவும் காணப்படும். பழத்தின் நடுப்பகுதியில் ஒன்று முதல் நான்கு பழுப்பு நிற, நீள்வட்ட விதைகள் காணப்படும்.வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு செழித்து வளரும். மிதமான மழையளவும் உறைபனி இல்லாத வறண்ட தட்பவெப்ப நிலை கொண்ட வெப்ப மண்டலம், மிதவெப்ப மண்டலப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு மிக உகந்த சூழ்நிலையாகும். இம்மரம் பல்வேறு வகையான மண்வகைகளில் வளரும் பண்புடையபோதிலும், கரிமச்சத்து நிறைந்த வடிகால் வசதியுள்ள மண் வகைகளில் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சலைக் கொடுக்கும். உவர், உப்புத்தன்மையையும் ஓரளவு தாங்கிவளரும் பண்புடையதாகும்.பயிர் பெருக்கம்: பொதுவாக விதைகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் விரைவில் உயிர்த்தன்மையை இழந்துவிடுவதால் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டவுடன் நிழலில் சிறிதளவு உலர்த்தப்பட்டு பின் உடனடியாக மேட்டுப் பாத்திகளில் விதைக்கப்பட வேண்டும். விதைகள் முளைக்க 15 முதல் 25 நாட்கள் வரை ஆகும். முளைத்த நாற்றுகளில் 4-5 இலைகள் உருவானஉடன் அவற்றை எடுத்து பாலிதீன் பைகளில் நடவேண்டும். 6 மாதங்களில் நாற்றுகள் வயலில் நட தயாராகிவிடும். ஒட்டுக் கட்டுதல், மொட்டுக்கட்டுதல் முறைகளும் பரிந்துரை செய்யப் படுகிறது. நடவு வயலில் 6து6 மீட்டர் இடைவெளியில் 60து60து60 செ.மீ. அளவு குழிகள் எடுத்து, குழிகளில் 30 கிலோ தொழு உரம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 20 கிராம் சூடோமோனாஸ் சேர்த்த மண்க லவை கொண்டு நிரப்ப வேண்டும். ஒட்டுக்கன்றுகளை அதன் ஒட்டுப்பாகம் மண்ணிற்கு மேலே இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். மழைகாலம் தொடங்கும் போது நடவு செய்வது நல்லது. தனிப்பயிராக பயிரிடும்போது அதனுடன் ஊடுபயிராக இஞ்சி, ஆரோரூட் கிழங்கு, அன்னாசி போன்றவற்றை பயிரிடலாம்.கவாத்து செய்தல்: நட்ட முதல் 2 வருடங்களுக்கு சிறிய அளவில் கவாத்து செய்து கிளை வளர்ச்சியை ஒழுங்கு செய்தல் வேண்டும்.அறுவடை: இம்மரம் 5 ஆண்டுகளில் நன்கு காய்க்க ஆரம்பித்துவிடும். ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும். நன்கு முதிர்ச்சி அடைந்து பழுக்கும் தருவாயில் உள்ள பழங்களையே அறுவடை செய்ய வேண்டும். மரம் ஒன்றுக்கு 400-600 பழங்கள் வரை அறுவடை செய்யலாம்.நன்கு பழுத்த பழங்களை தோல் நீக்கியோ அல்லது தோலுடனோ விதைகளை நீக்கிவிட்டு?உண்ணலாம். சாறு இல்லாமல் மாவுச்சத்து நிறைந்து காணப்படுவ தால் இதன் சதைப்பகுதி மின் உலர்த்திகளில் உலர்த்தப் பட்டு பவுடராக்கப்படுகிறது. ஐஸ்கிரீம், பேக்கரிகளில் கேக், ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது. இம்மரத் தினை அனைவரும் வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து பயன்பெறலாம். இதன் நாற்றுக்கள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறையில் விற்பனைக்கு உள்ளன. (தகவல்: தி.தங்கச்செல்வபாய், த. செல்வகுமார், க.இறைவன், வேளாண்மை அறிவியல் நிலையம், பேச்சிப்பாறை-629 161. 94420 06831)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.