மாசிப்பட்ட பருத்தி அறுவடை உத்திகள்
பருத்தி விவசாயிகள் கவனத்திற்கு:- பருத்தி மகசூலை நல்ல விலைக்கு விற்க, பருத்தியின் தரம் மிகவும் அவசியம். பருத்தி அறுவடை செய்யும்போது வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியினை சருகுகள், இலைகள் கலக்காமல் சேகரிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறை பருத்தியினை அறுவடை செய்ய வேண்டும். பருத்தி அறுவடை செய்தவுடன் நிழலில் உலர்த்தவும். இல்லையெனில் பருத்தியின் நிறம் மாறி தரம் குறைய வாய்ப்புள்ளது.கறையுள்ள, நன்கு மலராத மற்றும் பூச்சி அரித்த பருத்தியை தனியே பிரித்து வைக்கவும். பருத்தியினை உலர்த்திய பின்னர் அதில் கலந்துள்ள இலைச்சருகுகள், காய்ந்த சப்பைகள், நன்கு மலராத மற்றும் பூச்சி அரித்த கறையுள்ள பருத்தி, கொட்டுப்பருத்திகள், 'நறுக்' பருத்தி சுளைகள் ஆகியவற்றினை நீக்கிவிட வேண்டும். காற்றோட்டமுள்ள அறையில் தரையில் மணல் பரப்பிவைத்து அதன்மேல் பருத்தியை சேமித்து வைக்கவும். பருத்தியை ரகம் வாரியாகவும் தரம் வாரியாகவும் தனித்தனியே சேமிக்க வேண்டும்.குறிப்பு: நேரடியான சூரிய ஒளியில் பருத்தியை உலர்த்தக்கூடாது. அவ்வாறு செய்வதால் நூல் இழைகளின் தரம், விதை முளைப்புத்திறன் குறைய வாய்ப்புண்டு.முனைவர் எஸ்.ஜெயராஜன் நெல்சன்,ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.