உள்ளூர் செய்திகள்

தென் மாவட்டங்களில் இரண்டாம் போகத்தில் தீவிர நெல் சாகுபடி

நெல் சாகுடி கால்வாய் பாசனத்தையும், கண்மாய் மற்றும் கிணற்றுப் பாசனத்தையும் மற்றும் ஐப்பசி அடை மழையையும் பொறுத்து உள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் அதாவது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் இவைகளில் ஐப்பசி மழை (வடகிழக்குப் பருவமழை) பெய்யத் துவங்கிவிட்டது. இப்பட்டம் நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதே. விவசாய விஞ்ஞானிகள் இப்படி திடீரென்று தோன்றும் பருவங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இப் பட்டத்திற்கு ஏற்ற ரகங்களாகிய ஆடுதுறை 36, ஆடுதுறை 45 மற்றும் ஜே13 போன்றவைகளை சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.1. ஆடுதுறை 36 ரகத்தின் வயது 115 நாட்கள். இது பல வருடங்களாக விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் இதனை காலத்தை வென்ற ரகம் என்று சொல்வார்கள். இது ஆபத்தில் தவிக்கும் விவசாயிகளை காப்பாற்றும் நெல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் அரிசி வெண்மை நிறத்தைக் கொண்டு ஐ.ஆர்.20 அரிசி போலவே இருக்கும். இதன் வயதான நாற்றினை நட்டாலும் மகசூல் பாதிக்கப்படுவதில்லை. இந்த ரகத்தை கொடிய வியாதியோ, பூச்சிகளோ தாக்கி அழித்த வரலாறு கிடையாது. இதில் கணிசமான அளவு வைக்கோல் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் இதனை சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் விவசாயிகள் இதனை பயமின்றி சாகுபடி செய்யலாம்.2. தமிழகத்தில் தற்போது விவசாயிகளின் கவனத்தை கவர்ந்துவரும் அதிசய நெல் ஆடுதுறை 45 ரகமாகும். இது இரண்டாம் போகத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. தற்போது விவசாயிகளால் இது ஒரு மகசூல் திறன்மிக்க நெல் என்று போற்றப்பட்டு வருகிறது. இந்த ரகம் உயர் விளைச்சல் ரகத்தைப் போல ஏக்கரில் 4 டன் வரை மகசூல் கொடுக்கத் துவங்கிவிட்டது. வயது 105-115 என்பதால் முதல் போகத்திலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. அணைக்கட்டு பகுதிகளிலும் இதனை சாகுபடி செய்யலாம். இதன் நெல் நடுத்தர சன்னமாக உள்ளது. அரிசி வெண்மை நிறத்தைக் கொண்டு உள்ளது. வெண் புழுங்கல் அரிசி செய்வதற்கு மிகவும் ஏற்றது. ஆடுதுறை 45 ரகத்தினை பூஞ்சாள வியாதி தாக்கக்கூடும். இதனை சுலபமாக கட்டுப்படுத்தலாம். நோயினைத் தடுக்க சூடோமோனாஸ் பிளாரசன்ஸ் ஈர விதை நேர்த்தி செய்யலாம். சாகுபடி சமயம் சாணத்துடன் பவுடரைக் கலந்து வயலுக்கு இடவேண்டும். தொண்டைக் கதிர் சமயம் தண்ணீரில் கலந்து பயிர்மேல் தெளிக்கலாம்.3. தமிழகத்தில் 100 நாள் நெல்லாகிய ஜே-13 விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த குறுகிய கால நெல்லினை இரண்டாம் போகத்தில் சாகுபடி செய்யலாம் என்கிறார் கருப்பாயூரணியைச் சேர்ந்த தர்மராஜன் (மொபைல்: 93624 44440). மதுரை, திண்டுக்கல் மற்றும் காந்திகிராமத்தைச் சுற்றிலும் வறட்சி நிலையில் ஜே-13 விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது. ஜே-13 அரிசி இட்லி போன்ற பலகாரம் செய்ய ஏற்றது. இதில் நல்ல மாவு காணுகின்றது. இதோடு மட்டுமல்ல. இந்த ரகம் பொரி செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது. சேலம் பகுதியில் கிணற்றுப் பாசனத்தில் குறுகிய கால ரகமாகிய ஜே-13 நெல்லை முதலில் சாகுபடி செய்துவிட்டு உடனே கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த கரும்பில் வெல்ல மகசூல் அதிகரிக்கின்றது. இந்த ஒரு நன்மைக்காக விவசாயிகள் ஜே-13 ரகத்தை சாகுபடி செய்கின்றனர். தென் மாவட்டங்களில் தைரியமாக இரண்டாம் போகத்தில் விவசாயிகள் ஜே-13 ரகத்தை சாகுபடி செய்யலாம். விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடியில் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். தற்போது விவ சாயிகள் நெல் சாகுபடி துவங்கி நிலத்தை நடவு செய்வதற்கு ஏற்ற நிலை கொண்டுவந்துள்ளனர். இவர்கள் திருந்திய நெல் சாகுபடி முறைகளை அனுசரித்து கணிசமான லாபம் எடுக்கலாம்.-எஸ்.எஸ்.நாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !