உள்ளூர் செய்திகள்

நெற்பயிரில் குலை நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

மேக மூட்டத்துடன் கூடிய வானிலை, காலை குளிர், அதிகாலை இலைகளில் பனி அல்லது நீர் திவலைகள் ஆகிய சூழ்நிலையில் நெற்பயிரில் குலை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. டீலக்ஸ் பொன்னி என்ற பி.பி.டி 5204, பால் ஒட்டு என்ற அம்பை 16, ஏ.டி.டி., 43 நெல் ரகங்களை சாகுபடி செய்தோர் கவனமாக இருக்க வேண்டும். தழைச்சத்து உள்ள உரங்களான யூரியா, அமோனியம் குளோரைடு, டி.டி.பி., அதிக அளவில் இட்ட வயலில் குலை நோய் விரைவில் வரும்.குலை நோய் முதலில் கண்வடிவப் புள்ளிகளாக இலையில் தோன்றுகிறது. புள்ளியின் நடுவில் சாம்பல், ஓரம் பழுப்பு நிறமாக இருக்கும். விரைவில் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலை முழுவதும் பரவி கருகி விடும். தீவிர தாக்குதலுக்கு உள்ளான பயிர் தீப்பிடித்து கருகியது போல காணப்படும், வளர்ச்சியும் குறைந்துவிடும். கதிர் வாங்கிய பின் இந்நோய் ஏற்பட்டால் கதிர் காம்பு பகுதியில் கருப்பு புள்ளி தோன்றி அழுகி கதிர் குலை முறிந்து தொங்கும், நெல் மணிகளும் பதராகிவிடும்.குலைநோய் வரும் முன் தவிர்க்க சூடோமோனாஸ் 0.2 சதம் கரைசலை (லிட்டருக்கு இரண்டு கிராம் அல்லது ஹெக்டேருக்கு இரண்டரை கிலோ) நட்ட 45வது நாள் முதல் பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். குலை நோய் தோன்றிய பின் தழைச்சத்து கொண்ட உரங்களை இடுவதை, தள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக டீலக்ஸ் பொன்னி, பால் ஒட்டு (அம்பை 16) செல்லப்பொன்னி (ஏ.டி.டி.,43) பயிரிட்டோர் கவனமாக இருக்க வேண்டும்.முதலில் நோயை கட்டுப்படுத்த கீழே கூறப்பட்ட மருந்து தெளித்த பின் தழைச்சத்து இட வேண்டும். அப்படி தழைச்சத்து இடும் போது வேப்பம் புண்ணாக்கு கலக்க வேண்டும். தேவையான தழைச்சத்தை பிரித்து இரண்டு மூன்று முறையாக இட வேண்டும்.குலைநோயை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு கார்பன்டசிம் 500 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 75 டபிள்யூ, பி., 100 கிராம் வீதம் பயிர் முழுவதும் படும்படி தெளிக்க வேண்டும்.மருந்து கரைசலை இலைகளில் நன்றாக படிய சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால் அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தினால் குலை நோயை விரட்டலாம்.-இரா.விமலாதலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்ஸ்ரீவில்லிபுத்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !