பட்டுப்புழு வளர்ப்பு (இளம்புழு வளர்ப்பு)
தமிழ்நாட்டு பட்டு உற்பத்தியில் நம் நாடு நான்காவது இடத்தைப் பெறுகிறது. 1956ம் ஆண்டுகளில் தமிழகத்தில் கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் பட்டு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல செயல்பாட்டு திட்டங்களினால் பட்டு வளர்ப்பானது, தமிழ்நாட்டில் இதர சமதளப்பரப்பிற்கும் பரவியது. 1979ஆம் ஆண்டிலிருந்து தொழில் மட்டும் வணிக துறையின்கீழ் பட்டு வளர்ப்பு துறை, சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.ஆராய்ச்சி நிலையங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய செலவு குறைக்கும் தொழில்நுட்பங்களினால் (பட்டுப்புழுவிற்கான தனி அறை, மல்பெரி தண்டு அறுவடை முறையில் புழு வளர்ப்பு, இளம்புழுவை விவசாயிகளுக்கு வழங்குதல்) பட்டு மகசூலும் லாபமும் விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கிறது.தற்சமயம் தமிழ்நாட்டில் 30,000 விவசாயிகளால் 35,000 ஏக்கர் அளவு மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், கும்பகோணம், ஆரணி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள நெசவு செய்யும் மையங்களில் கைத்தறியாக பட்டு நெய்யப்பட்டு வருகிறது.இளம்புழு வளர்ப்பு: பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் மிகுந்த கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று, இளம்புழு வளர்ப்பாகும். பட்டுப்புழுக்களில் நோய்கள் வராமல் தடுக்க இளம் புழுக்களிலிருந்தே நல்ல சுகாதாரமான சூழலில் வளர்க்க வேண்டும். சரியான மல்பெரித் தழைகளைக் கொடுத்து வளர்ப்பறைகளில் தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் சூழ்நிலையில் இளம்புழுக்களை வளர்த்தால் அவை நோய் எதிர்க்கும் திறன் பெற்று பிறகு நல்ல மகசூலைத் தரவல்லது.இளம்புழு வளர்ப்பு அறை: ஒவ்வொரு பட்டு விவசாயியும் இளம்புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஓர் அறை வைத்திருக்க வேண்டும். இதனால் முதிர்ந்த புழுக்களை வளர்க்கும் இடங்களிலிருந்து கிருமித் தொற்றை தவிர்க்க முடியும். மேலும் இளம்புழு வளர்ப்பிற்கு சிறிய அளவே இடவசதி தேவைப்படுவதால் தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்க முடியும். இளம்புழு வளர்ப்பறைகளில் 28 செல்சியஸ் வெப்பநிலையும் காற்றில் ஈரப்பதம் 70 முதல் 80 சதமும் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் மல்பெரித் தோட்டத்திற்கு இளம்புழு வளர்ப்பிற்கு சுமாராக 150 சதுர அடி பரப்பு கொண்ட வளர்ப்பறை தேவை. வளர்ப்பறை 15 x 10 x 16 என்ற அளவில் அமைக்க வேண்டும். நான்கு பக்கமும் கதவுகள் கொண்ட ஜன்னல்களை அமைக்க வேண்டும்.இளம்புழு வளர்ப்பு சாதனங்கள்: இளம்புழுக்களை வளர்க்க இதற்கெனப் பிரத்யேகமாகச் செய்யப்படும் 3 x 2 அடி அளவுள்ள பிளாஸ்டிக் அல்லது மரத்தட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியோ அல்லது அவற்றை தாங்கிகளில் வைத்தோ புழுக்களை வளர்க்கலாம்.ஐந்து முதல் ஏழு நாட்களில் பட்டுக்கூடுகள் உறுதியாகும்போது பட்டுக்கூடுகளை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட பட்டுக்கூடுகள் இதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பட்டுக்கூடு சந்தைகளுக்கு உடனடியாக விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றன. தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் (அஞ்சல்), தாராபுரம்-638 657.-எம்.அகமது கபீர், 93607 48542.