சின்னச்சின்ன செய்திகள்
வேளாண் வணிக தொழிற்கூடம்: இந்த வேளாண் தொழிற்கூடத்தின்கீழ் புது டில்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ''தேசிய வேளாண் புதுமைத்திட்ட நிதியுதவியுடன் வணிக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு மையம்'' இயங்கிவருகிறது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் வேளாண் தொழில் முனைவோருக்கான அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவருவதே 'வேளாண் திட்டம் மற்றும் மேம்பாட்டு குழு'வின் நோக்கமாகும். இம்மையத்தின்மூலம் வேளாண் புதுமைகள் கண்டறியப்பட்டு சந்தைப்படுத்தப் படுகின்றன. மேலும் இம்மையம் விதை உற்பத்தி, வேளாண் இடுபொருள் உற்பத்தி, வேளாண் உபதொழில்நுட்பம், உணவு பதப் படுத்துதல், வேளாண் தொழில்களான ஒப்பந்தப் பண்ணையம், துல்லிய பண்ணையம், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் வேளாண் தொழில் முனைவோருக்கு வழிகாட்டி வருகிறது.வணிகத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தொழில் முனைவோருக்கான சேவைகளைப் பெற்றிட ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர், கட்டண அடிப்படையில் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். இம்மையத்தின் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கான சேவைகள், தொழில்நுட்ப வணிக மேலாண்மை குறித்த ஆலோசனைகள், பல்கலைக் கழகத்துடன் இணைந்துசெயல்படுதல், சந்தை தகவல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சந்தைப்படுத்துதல் பற்றிய தகவல்கள் 'தகவல் பரிமாற்றச் சேவை'களின் மூலம் அறிமுகம் பெறுதல், வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பங்களைப் பெறுதல், விதைக் கூட்டமைப்பில் உறுப்பினராகி வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதியபயிர் ரகங்களையும் ஆய்வகங்களையும் பயன்படுத்துதல், பல்கலைக் கழகத்தின் கருத்தரங்க கூடங்களை பயன்படுத்துதல், வயல்வெளிச் சோதனைகளை, ஆராய்ச்சித் திட்டங்கள் அமைப்பதற்கான உதவிகளைப் பெறுதல் ஆகிய சேவைகள் வழங்கப் படுகின்றன.இதுவரை 52 தொழில் முனைவோர்கள் உறுப்பினராக இணைந்து பயன்பெற்றுள்ளனர். தேவைக்கேற்ற பயிற்சிகள், பொருட்களை கண்காட்சிக்கு வைத்தல், சந்தைப்படுத்து வதற்கான வழிகாட்டுதல், ஆராய்ச்சிக் கூட வசதிகள், பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு போன்ற சேவைகள் வழங்கப் படுகின்றன. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குனர், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1377, 661 1310. பேக்ஸ்: 0422-661 1399. மின் அஞ்சல்: business@tnau.ac.in. (தகவல்: முனைவர் கு.ராமசாமி, துணைவேந்தர், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003).கேழ்வரகில் உள்ள சத்துக்கள்: நூறு கிராம் கேழ்வரகில் மாவுச்சத்து 72 கிராம், புரதச்சத்து 7.3 கிராம், சுண்ணாம்புச்சத்து 344 மில்லிகிராம், பாஸ்பரஸ் 203 மில்லிகிராம், இரும்புச்சத்து 3.9 மில்லிகிராம் உள்ளன. உணவு பயன்பாட்டிற்கான நார்ச்சத்து 19 கிராம் உள்ளது.உடல் வளர்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான முக்கிய அமினோ அமிலங்களான டிரிப்டோபேன், சிஸ்டின், மெத்தியோனின் ஆகியவை உள்ளன. முளைகட்டும் தன்மை இருப்பதால் சத்துமாவு தயாரிப்பதற்கு பெரிதளவில் பயன்படுத்தப்படுகிறது. கேழ்வரகு உண்பதால் நீரழிவு நோய் வராமலிருக்கவும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.கேழ்வரகில் குளூட்டன் என்ற புரதச்சத்து இல்லாததும் குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு அற்புதமான மாற்று தானியமாக பயன்படுகிறது. கேழ்வரகிலுள்ள சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி, ஆர்த்ரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய நோய்களின் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.கேழ்வரகிலிருந்து வழக்கமாகச் செய்யப்படும் களி, கூழ், புட்டு இவைகளோடு தோசை, இட்லி, இடியாப்பம், ரொட்டி, உப்புமா, அவல் போன்ற காலைச் சிற்றுண்டிகளையும், அல்வா, இலைக்கொழுக்கட்டை, பக்கோடா, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி, முறுக்கு, தட்டுவடை, காரக்கொழுக்கட்டை போன்ற கார வகைகளையும் தயாரிக்கலாம். (தகவல்: முனைவர் து.மாலதி, பேராசிரியர், உணவியல் துறை, அறுவடை பின்சார் தொழில் நுட்பம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1340)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்