சின்ன சின்ன செய்திகள்
விதை உரக்கட்டு நுட்பம்: மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல் நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு வில்லைகள், அடிப்பகுதியில் இருப்பது சமச்சீர் உர வில்லை. இவை எளிதில் மக்கக்கூடிய காகிதத்தைக் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. கடைசியில் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்தித்தாள்களைக் கொண்டு சுற்றி அதன் நுனிப்பகுதி பசையினால் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிரின் விதைகளை மண்ணில் ஊன்றும் போது விதைக்கு அடியில் அல்லது பக்கத்தில் செரிவூட்டப்பட்ட எரு, உரங்கள் பதிக்கப்படுகின்றன. சத்துக்களை நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் சத்து இழப்புகள் குறைகின்றன. விதை உரக்கட்டில் பயன்தரும் நுண்ணுயிர்களும், நுண்ணூட்டங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.ஒரு விரல் அளவுள்ள ஒவ்வொரு விதைக் கட்டையும் மண்ணில் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ பதிக்க வேண்டும். பயிரிடும் காலத்திற்கு முன்பே விதை உரக்கட்டுகளை தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதிக அளவில் உரக்கட்டுகள் தயாரிக்க இயந்திரங்களை பயன்படுத்தும்போது அதன் தயாரிப்பு செலவு மிகவும் குறைகிறது. பருத்தி, மக்காச்சோளம், நெல், கார்னேசன், செண்டுமல்லி, காலிபிளவர் பயிர்களை பயிரிட இந்த விதை உரக்கட்டு தொழில்நுட்பம் முறை உகந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்குதொடர்பு முகவரி: முனைவர் கோ.அருள் மொழிச்செல்வன், மண்ணியல் வேளாண் வேதியல் துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர் - 641 001. போன்: 661 1485, 661 1235.முருங்கை எண்ணெய் (Ben Oil) : முருங்கைகளின் விதையிலிருந்து சுமார் 42 சதவீதம் எண்ணெய் பெறப்படுகிறது. எண்ணெய் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது ஒட்டும் தன்மையுடையது. இது இயந்திரங்களில் உராய்வு நீக்கியாக பயன்படுகிறது. மேலும் இது சமையல் எண்ணையாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெய் ஆவியாகும் தன்மையுடையது. பொருட்களை உறிஞ்சு தக்க வைத்துக் கொள்ளும் தன்மையுடையதால் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படும். தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. முருங்கை எண்ணெயில் 13 சதம் நிறைவுற்ற கொழுப்பு அமிலமும் உள்ளன. மற்ற தாவர எண்ணெய்களை விட இதில் 40 சதம் அதிக அளவு (72%) ஓலியம் அமிலம் உள்ளது.தாவர வளர்ச்சி ஊக்கிகள்: முருங்கை இலையிலிருந்து பெறப்படும் சாறுடன் 80 சதம் எத்தனால் சேர்த்து அதனை நாம் தாவர வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தலாம். அந்த சாறு இளம் செடிகள் வளர்வதற்கு இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. செடிகளை உறுதியாக்கவும், பூச்சி நோய்களில் இருந்து பாதுகாக்கவும், வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுகின்றன. இந்த வளர்ச்சி ஹார்மோன்களைத் தெளிப்பதன் மூலம் பெரிய நீள மான காய்கள், பழங்கள் கிடைப்பதோடு காய்களின் எடை அதிகரிக்கும். அதிக விளைச்சல் கிடைக்கும்.உணவு பொருட்களைப் பாதுகாப்பதில் முருங்கையின் பங்கு: முருங்கை இலையில் அதிக அளவில் வைட்டமின்கள், புரதங்கள் உள்ளன. உணவுப் பொருட்களான சாஸ், பழச்சாறு, நறுமணப்பொருட்கள், பால், ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை பாதுகாப்பதற்கு முருங்கை இலை பயன்படுகிறது.மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி: முனைவர் பி.பொன்னுச்சாமி, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர் -641 003., போன்: 0422 - 661 1283.உளுந்து மதுரை 1 : புதிய ரகம் வயது 70 -75 நாட்கள். பருவம் - புரட்டாசிப் பட்டம் மகசூல் எக்டருக்கு 790 கிலோ அதிகபட்சமாக 1000 கிலோ கிடைக்கும். கோ 6 மற்றும் வம்பன் 6 ரகங்களை விட முறையே 15 சதம் மற்றும் 13 சதம் கூடுதல் விளைச்சல் கொடுக்கும்.சிறப்பியல்புகள்: அதிக மாவு பொங்கும் தன்மையுடையது. மஞ்சள் தேமல் நோய் மற்றும் களப்புழு ஆகியவற்றின் தாக்குதலுக்கு அதிக எதிர்ப்புதிறன் கொண்டது. நீலகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் நீங்கலாக தமிழகம் முழுவதும் பயிரிடலாம்.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.