மருத்துவ குணம்மிக்க பாரம்பரிய உணவுகளை பதப்படுத்துவதற்கான தொழில்நுட்ப பயிற்சி
உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெயரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்றவை மக்களிடையே முக்கியத் துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கும். மற்ற நாட்களில் சிறுதானிய உணவுகளை உண்பார்கள். எனவேதான் அந்த காலத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதையெல்லாம் ஒதுக்க ஆரம்பித்தபிறகுதான் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற ஏகப்பட்ட நோய்களில் சிக்கித்தவிக்கிறோம். இன்றைய தலைமுறையினர் சிறு தானியங்களை பார்த்ததுகூட இல்லை. தற்போது நோய்களின் தாக்கத்தால் சிறுதானிய உணவுகளை மக்கள் ஏற்க முன்வந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறுதானிய உணவுகளை உடனடி உணவாகவும் எல்லா வயதினர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் உட்கொள்ளும் வகையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 30 வகை சிறுதானிய உணவுகளை அன்றாடம் உபயோகிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுணவுகளின் தரம் மற்றும் சத்துக்கள் முதலிய வையும் கண்டறியப்பட்டது. தயாரிக்கப் பட்ட சிறுதானிய உணவுகளில் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் வரை புரதச் சத்தும் 5 முதல் 8 கிராம் வரை நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாது உப்புக்களும் அதிகளவில் உள்ளது. சிறுதானிய உணவுகளை விரும்பி சாப்பிட மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக் கொடுத்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். இதனால் சிறுதானியத்தின் உபயோகம் அதிகரிக்கும்போது விவசாயிகளும் அதிகம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உண்டு. விவசாய பெருமக்களே உற்பத்தி செய்த சிறுதானியங்களை மாற்று பொருளாக பதப்படுத்தி விற்பனை செய்யும்போது விவசாயிகள் வருமானம் பெருகும்.அதேபோல் கீரைகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள் தக்க அளவில் உள்ளன. இவை உடலுக்கு மிக குறைந்த அளவே தேவைப்படுகிறது. இக்கீரை உணவை சரிவர உட்கொள்ளாவிடில் பல நோய்கள் தாக்குவதற்கு வழி ஏற்படும். இக்கீரைகளில் மணத்தக்காளி கீரை உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் நிறைந்திருப்பதோடு பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சித்தா, ஆயுர்வேத மருந்துகளில் இக்கீரை அதிகம் உபயோகிப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியில் வயிற்றுப்புண் (அல்சர்) குணப்படுத்தும் தன்மை உள்ளது கண்டறியப்பட்டது. மணத்தக்காளியில் உள்ள சொலனின், ஆல்கலாய்டு, சல்போனின் போன்ற வகைகளுக்கும் புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இக்கீரை சளி, இருமல் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாகும். இம்மருத்துவ குணம்மிக்க கீரையை உபயோகித்து பலதானிய மிக்ஸ், ரொட்டி மிக்ஸ், சூப் மிக்ஸ் போன்ற பல உணவுகளை தயாரிக்கலாம்.பழங்களில் வில்வம்பழம் பண்டை காலத்திலிருந்தே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மார்மலோசின், ஈகிலின், ஆனத்தோசயனின் போன்ற மருத்துவ தன்மை உள்ளது. இவ்வகை அனைத்து உணவுகளையும் தொழில் ரீதியாக பதப்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப் படுகிறது. அதோடு அதற்கான இயந்திரங்கள், பேக்கிங் முறைகள் பற்றிய விவரங்களும் அளிப்பதுடன் இத்தொழில் நுட்பங்களுக்கான செய்முறை பயிற்சியும் அளிக்கப் படுகிறது. மேலும் விபரங்களுக்கு: டாக்டர் சி.பார்வதி,பேராசிரியர் மற்றும் தலைவர்,மனையியல் விரிவாக்கத்துறை,மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.0452-242 4684, 94422 19710, 97871 50703.