மஞ்சள் வழித்தடத்தில் இன்று முதல் 4வது ரயில்
பெங்களூரு : மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில், ஆர்.வி.ரோடு- பொம்மசந்திரா இடையே, நான்காவது ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே 19.15 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். ஆகஸ்ட் 11ம் தேதி முதல் பயணியர் ரயில் சேவை துவக்கப்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் 25 நிமிட இடைவெளியில், மூன்று ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் ரயில்களை விரைவில் இயக்க வேண்டும் என்று பயணியரிடம் இருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் இன்று முதல் நான்காவது ரயில் இயங்கப்பட உள்ளது. இதனால் ரயில்களை இயக்கும், 25 நிமிட இடைவெளி 19 நிமிடங்களாக குறையும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இதுவரை காலை 6:30 மணிக்கு முதல் ரயில் இயங்கியது. இன்று முதல் 6:00 மணிக்கு முதல் ரயில் இயக்கப்படும். கடைசி ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.