காய்ந்த மரக்கிளை முறிந்து விழுந்து கறி வாங்க சென்றவர் படுகாயம்
பனசங்கரி : பனசங்கரி டோபிகாட் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் அக் ஷய், 29. நேற்று தனது தந்தையின் பிறந்த நாள் என்பதால், இறைச்சி வாங்க கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜ் சீனிவாச நகரில் செல்லும் போது, காய்ந்த பெரிய மரக்கிளை ஒன்று இவர் மீது விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுவரை 1.5 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர். அதற்கு மேல் பணம் திரட்ட முடியாததால், தவித்து வருகின்றனர். ஏனெனில், ஓராண்டுக்கு முன் தான் அவரது தாயார் உயிரிழந்தார். தந்தை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வருகிறது.இதேவேளையில் தகவல் அறிந்த கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரி ரங்கநாத சுவாமி, மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்த அக் ஷயின் பாட்டி சாவித்ரிம்மா, 'அக் ஷய் உடல் நலமடையும் வரை ரங்நாதசாமி எங்களுடன் இருக்க வேண்டும். பாதியில் எங்களை கைவிட்டால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்' என்றார்.டாக்டரிடம், ரங்கநாத்சாமி விசாரித்த பின் கூறுகையில், ''காய்ந்த மரக்கிளை விழுந்து, அக் ஷயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. மூன்று மணி நேரம் சிகிச்சை நடக்கும். மருத்துவமனையில் அவருக்கான செலவை, ஆணையமே ஏற்கும்,'' என்றார்.