மதம், ஜாதி பெயரில் பா.ஜ., அரசியல் காங்., - எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் புகார்
மைசூரு : ''மதம், மொழி, ஜாதி பெயரால் அரசியல் நடத்துவோரால், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை செய்ய முடியாது,'' என, நரசிம்மராஜ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் தெரிவித்தார்.மைசூரு ராஜிவ் நகரில் 'நம்ம கிளினிக்'கை, நேற்று எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் கர்நாடகா மேம்பாடு அடைந்து வருகிறது. மேம்பாட்டுப் பணிகளுக்காக அனைத்து தொகுதிகளுக்கும் நிதி வழங்கி உள்ளனர்.ஆனால் பா.ஜ.,வினர், மதம், ஜாதிகளை முன் வைத்து, மாநிலத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை மறக்கடிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பணி செய்யாமல், அரசு நிதி ஒதுக்கவில்லை என்று பொய்யாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.சட்டசபை கூட்டத்தொடரில், அக்கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., கூட, மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிக்கவில்லை. ஆனால், சபையில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.கர்நாடக தொகுதி மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய, அண்டை மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் பா.ஜ.,வினருக்கு மாநிலம் மேம்பாடு அடைவது தெரியவில்லை.எனக்கும் அமைச்சராகும் ஆசை உள்ளது. ஆனால், அதற்கான சமயம் இன்னும் வரவில்லை. தற்போது அமைச்சரவையில் பதவி காலியாக இல்லை. எனவே, அது தொடர்பாக பேசுவது சரியல்ல.இவ்வாறு அவர் பேசினார்.