சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அண்ணன்கள்
தங்கவயல்: சொத்து தகராறில் தம்பியை அண்ணன்களே அடித்து கொலை செய்தனர்.தங்கவயல் தாலுகா, பேத்தமங்களா அருகே உள்ள என்.ஜி. உல்கூர் கிராமத்தில் வசித்தவர்கள் சீனிவாஸ் என்ற சீனப்பா, 66, சம்பங்கி, 64, ரகுபதி 62, ரமேஷ், 60. சகோதரர்களான நால்வரும் தனித் தனி வீடுகளில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தனர். இவர்களது தந்தையின் நிலத்தை பிரித்து கொள்வதில், தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரச்னைக்குரிய அந்த நிலத்தில் ரமேஷ் ஒரு கொட்டகையை அமைக்க தொடங்கினார். இதனை அண்ணன்கள் சீனப்பா, சம்பங்கி நேற்று தட்டி கேட்டுள்ளனர். இதனால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.கோபத்தில் சீனப்பா அங்கிருந்த ஒரு தடியை எடுத்து, ரமேஷை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ரமேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். சீனப்பா, சம்பங்கி இருவரும் பயந்து அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர்.பேத்தமங்களா போலீசார் வந்து, ரமேஷின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீனப்பாவை கைது செய்தனர். சம்பங்கியை தேடி வருகின்றனர்.