உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவாஜிநகர் மெட்ரோ பெயர் மாற்றம் மஹா., முதல்வர் பட்னவிஸ் எதிர்ப்பு

சிவாஜிநகர் மெட்ரோ பெயர் மாற்றம் மஹா., முதல்வர் பட்னவிஸ் எதிர்ப்பு

சிவாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை செயின்ட் மேரி பசிலிக்கா என மாற்றுவதற்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள துாய ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழாவில் முதல்வர் சித்தராமையா கடந்த திங்கட்கிழமை பங்கேற்றார். அவர் பேசுகையில், 'சிவாஜிநகரில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் செயின்ட் மேரி பசிலிக்கா என அழைக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தருவேன்' என கூறினார். இதை துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். 'ஹிந்து மன்னரான சத்ரபதி சிவாஜியின் பெயரை மாற்றி, மேரியின் பெயரை வைப்பதன் மூலம் ஓட்டு அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. எனவே, ரயில் நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது' என, மாநில பா.ஜ.,வினர் கோரினர். இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலைய பெயர் மாற்றம் குறித்து, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: கர்நாடக காங்கிரஸ் அரசு, சிவாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை செயின்ட் மேரி பசிலிக்கா என மாற்றுவது கண்டனத்திற்குரியது. இது சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் செயலாகும். நேருவின் காலத்தில் இருந்தே மஹாராஜா சத்ரபதி சிவாஜியை, காங்கிரஸ் அவமதித்து வருகிறது. முதல்வர் சித்தராமையாவுக்கு கடவுள், நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். மத அடிப்படையில் பெயரை மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ