பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
பெங்களூரு: 'ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின், ஹூவினகோனே கிராமத்தில், பள்ளியின் குடிநீர் தொட்டியில், விஷம் கலந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தன் 'எக்ஸ்' பக்கத்தில் முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்ட பதிவு: ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின், ஹூவினகோனே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில், மர்ம நபர்கள் விஷம் கலந்துள்ளனர். சின்னஞ்சிறு சிறார்களை கொல்ல நினைத்த செயல், பயங்கரவாதத்துக்கு சமமானது என்பது, என் கருத்தாகும். சமையல் ஊழியரால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அவர்களை நான் காப்பாற்றுகிறேன். 'சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த நபர்களை கண்டுபிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். குடிநீரில் விஷம் கலக்கும் மனநிலை, நமக்கு இடையே மனிதநேயம் குறைவதை உணர்த்துகிறது. இதை பற்றி அனைவரும் தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.