உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நந்திமலை ரோப்வே திட்டத்தை விரைவில் செயல்படுத்த முடிவு

 நந்திமலை ரோப்வே திட்டத்தை விரைவில் செயல்படுத்த முடிவு

சிக்கபல்லாபூர்: ''நந்திமலை ரோப்வே திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,'' என்று, சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியுள்ளார். சிக்கபல்லாபூரின் நந்தி மலையில் கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 'மயூரா சன்ரைஸ்' என்ற பெயரில் புதிய உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜ் நேற்று திறந்து வைத்தார். பின், அவர் கூறியதாவது: கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம், ஜங்கிள் லாட்ஸ் அண்ட் ரிசார்ட்டின் சொத்துக்கள், மாநிலத்தின் மிக அழகான, முக்கியமான சுற்றுலா தலங்களில் அமைந்துள்ளன. இதன் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். சிறந்த மேலாண்மை, நவீன வசதிகள், தொழில்முறை விருந்தோம்பல் சேவைகள் மற்றும் சர்வதேச அளவிலான செயல்பாட்டு நடைமுறைகள் மூலம் புதிய தோற்றம் அளிக்க முடிவு செய்து உள்ளோம். நடுத்தர வர்க்க சுற்றுலா பயணியருக்கு, மலிவு விலையில் தரமான விருந்தோம்பலை வழங்கும் நோக்கில், மயூரா சன்ரைஸ் உணவகம் கட்டப்பட்டுள்ளது. நந்திமலையில் வார இறுதி, விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. மலை உச்சிக்கு தனியார் வாகனங்கள் அதிகளவில் வருவதை கட்டுப்படுத்தும் வகையில், அடிவாரத்தில் வாகன நிறுத்துமிடத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு சுற்றுலா பயணியரை அழைத்து செல்ல பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். நந்தி மலையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும், 'ரோப்வே' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இது போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலா துறை செயலர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ''மயூரா உணவகத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்வதே, சுற்றுலா துறையின் நோக்கமாக உள்ளது. நந்தி ரோப்வே திட்டம் மிக முக்கிய பணி. இத்திட்டத்திற்கு வனத்துறை அனுமதி பெறும் செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை