மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது
பெலகாவி: குழந்தை பிறக்காததால், தன்னுடன் அடிக்கடி தகராறு செய்த மனைவியை கொலை செய்து விட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார். பெலகாவி மாவட்டம் பைலஹொங்களா தாலுகாவின், நேகினஹாளா கிராமத்தில் வசிப்பவர் பகீரப்பா கிலக்கனவர், 26. இவரது மனைவி ராஜேஸ்வரி, 21. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. அதற்கு கணவரே காரணம் என, மனைவி தினமும் சண்டை போட்டார். மனைவியின் செயலால் பகீரப்பா வெறுப்பில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல கணவரை திட்டியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த கணவர் பகீரப்பா, மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார். பின், மனைவி மாரடைப்பால் இறந்து விட்டதாக அக்கம், பக்கத்தினரிடம் அழுது நாடகமாடினார். மாமியார் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தார். இறுதி சடங்குக்கு ஏற்பாடு நடந்த போது, மகளின் கழுத்தில் காய அடையாளத்தை கண்டு சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் பெற்றோர், பைலஹொங்களா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்து பார்வையிட்ட போது, அவரது கழுத்தில் காய அடையாளம் இருப்பது தெரிந்தது. பகீரப்பாவை போலீசார் விசாரித்த போது, மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையில்லை என, தனக்கு தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்ததாக விவரித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.