வேலைக்கு செல்ல மறுத்த மனைவி அடித்து கொன்ற கணவர் ஓட்டம்
ராய்ச்சூர்: வேலைக்கு செல்ல மறுத்த மனைவியை, அடித்து கொலை செய்துவிட்டு, தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின் சிக்க உப்பேரி கிராமத்தில் வசிப்பவர் சித்தலிங்கப்பா பன்னிகோளா, 32. இவரது மனைவி பசம்மா, 28. எந்த வேலைக்கும் சரியாக செல்லாத சித்தலிங்கப்பா, மனைவியை வேலைக்கு சென்று, சம்பாதிக்கும்படி பலவந்தப்படுத்தினார். ஆனால், வேலைக்கு செல்ல பசம்மாவுக்கு விருப்பம் இல்லை. இதனால், மனைவியை அடித்தும், திட்டியும் கொடுமைப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவும், இவ்விஷயமாக வாக்குவாதம் நடந்தது. அப்போது மனைவியை அடித்துக் கொன்ற பன்னிகோளா, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். ஆனால், 'எங்களின் மகளை அடித்து, சேலையால் துாக்கிட்டு சித்தலிங்கப்பா கொலை செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பசம்மாவின் குடும்பத்தினர், லிங்கசகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில், சித்தலிங்கப்பா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். புது மனைவி கொலை சிக்கமகளூரின், ஆல்துார் அருகில் உள்ள ஹொசள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நேத்ராவதி, 32. இவருக்கும், ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புராவில் வசிக்கும் நவீன், 35, என்பவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே, இவர்களுக்குள் ஒத்துப்போகவில்லை. தினமும் சண்டை வந்தது. மனைவியை கணவர் தாக்கவும் செய்தார். கணவரின் செயலால் வெறுப்படைந்த நேத்ராவதி, தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு குடும்பத்தினர் சமாதான பேச்சு நடத்தியும் பயன் இல்லை. கணவரை விவாகரத்து செய்யவும், நேத்ராவதி தயாரானார். தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக, போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். இதனால் நவீன் கோபமடைந்தார். நேற்று அதிகாலை மனைவியின் வீட்டுக்கு சென்று, தகராறு செய்தார். கத்தியால் மனைவியை பல முறை குத்திவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த நேத்ராவதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த ஆல்துார் போலீசார், நவீனை தேடி வருகின்றனர்.