உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தொல்லை இருந்தால் அதிகாரிகள் சஸ்பெண்ட்

 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தொல்லை இருந்தால் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெலகாவி: ''ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், இடைத்தரகர்களின் தலையீடு இருப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி எச்சரித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறப்பினர் உமாஸ்ரீ சார்பில், ஐவான் டிசோசா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது: ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகம் உள்ளது. இதனால் பொது மக்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆன்லைன் வசதி செய்துள்ளோம். அப்படியும் இடைத்தரகர்களின் தலையீடு இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும்படி, போக்குவரத்து துறை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். பொது மக்கள் இப்போது ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் வழியாக 24 சேவைகள், ஆப்லைன் வழியாக 28 சேவைகள் கிடைக்கின்றன. இந்த சேவைகளை மக்கள், தங்களின் வீட்டில் இருந்தே பெறலாம். இடைத்தரகர்களின் தொல்லை, முற்றிலுமாக நின்றுள்ளது என நான் கூறமாட்டேன். ஆனால் வரும் நாட்களில், 100 க்கு 100 சதவீதம் அதை செய்வோம். நெலமங்களா அருகில் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டது. அறிக்கை கேட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர். தவறு செய்திருப்பது உறுதியானால் அதிகாரிகள் மீது தயவு, தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பேன். சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி