நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வழக்கு
பெங்களூரு: அரசுக்கு எதிராக, சீனிவாசப்பூர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட் சிவா ரெட்டி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரிட் மனுவில் அவர் கூறியுள்ளதாவது: சீனிவாசப்பூர் தொகுதிக்கு தேவையான நிதி வழங்குமாறு அரசிடம் பலமுறை முறையிட்டேன். அரசு நிதி ஒதுக்கியுள்ள விபரங்களை வெளியிடவில்லை. பாரபட்சம் காட்டுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டுக்கு மட்டும் தலா 50 கோடி ரூபாயை விடுவித்த அரசு, ம.ஜ.த., - பா.ஜ.., எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளுக்கு அத்தகைய நிதியை வழங்கவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதியை வெளியிடாமல் அரசியலமைப்பின் 14வது பிரிவின் சமத்துவக் கொள்கையை மீறியுள்ளனர். ம.ஜ.த., - பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு நிதி வழங்குவதில்லை என்று சட்டசபை கூட்டத் தொடரிலும் வலியுறுத்தி உள்ளேன். எனவே, சீனிவாசப்பூர் தொகுதிக்கு நிதி ஒதுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.