உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுகாதார நிலையத்தில் மின்தடை மொபைல் உதவியால் பிரசவம்

சுகாதார நிலையத்தில் மின்தடை மொபைல் உதவியால் பிரசவம்

ராய்ச்சூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்தபோது, திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், டாக்டர்கள் பிரசவம் செய்தனர். ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின், ஹட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களின் மக்கள், மருத்துவ சிகிச்சைக்கு இதைத்தான் நம்பியுள்ளனர். கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள், நர்ஸ்களின் உதவியுடன் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. ஜெனரேட்டரும் பழுதடைந்திருந்தது. இதனால் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. 'ஆரம்ப சுகாதார மையத்தில் அடிப்படை வசதிகளே இல்லை. நீண்ட நாட்களாக மின்சார பிரச்னை உள்ளது. இரவு நேரத்தில் மொபைல் போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். 'மங்கலான வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளிகளின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டால், யார் பொறுப்பு?' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை