தாயும், குழந்தையும் இறப்பு; மருத்துவமனை மீது தாக்குதல்
கலபுரகி : தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியும் அவர் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை சூறையாடினர்.கலபுரகி நகரில் வசிக்கும் இம்ரான் ரஜ்ஜி என்பவரின் மனைவி சபா பர்வீன், 24, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவரை பிரசவத்துக்காக, நேற்று முன் தினம் மாலை, எம்.எஸ்.கே., மில் லே - அவுட்டில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.பிரசவம் ஆவதற்கு முன்பே, வயிற்றுக்குள்ளேயே சிசு உயிரிழந்தது. சிறிது நேரத்தில் சபா பர்வீனும் இறந்தார். குறைந்த ரத்த அழுத்தத்தால் அவர் இறந்ததாக, டாக்டர்கள் கூறினர்.ஆனால் டாக்டர்களின் அலட்சியத்தால், தாயும், குழந்தையும் இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். ஜன்னல் கண்ணாடிகள், மேஜை, இருக்கைகளை அடித்து நொறுக்கினர்.தகவல் அறிந்து அங்கு வந்த, ஆர்.ஜி.நகர் போலீசார், சபா பர்வீன் உறவினர்களை சமாதானம் செய்து, சூழ்நிலையை சரி செய்தனர்.