உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முஸ்லிம்கள் பிரச்னையில் தி.மு.க., மீது த.வெ.க., குற்றஞ்சாட்டியதால் அமளி

 முஸ்லிம்கள் பிரச்னையில் தி.மு.க., மீது த.வெ.க., குற்றஞ்சாட்டியதால் அமளி

சென்னை: முஸ்லிம் பிரச்னையில், தி.மு.க., மீது குற்றஞ்சாட்டி, மதுரை மத்தி தொகுதி, த.வெ.க., -- எம்.எல்.ஏ., மதார் பத்ருதீன் பேசியதால், சட்டசபையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபையில் நடந்த விவாதம்: த.வெ.க., - மதார் பத்ருதீன்: மத்திய அரசு குடியுரிமை சட்டம், வக்ப் திருத்தச் சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து, முஸ்லிம்களின் பாதுகாவலனாக முதல்வர் விஜய் இருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த சட்டங்களுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் அதாவது, 13 தொகுதிகளில் வாய்ப்பளித்தவர் விஜய். முஸ்லிம்களின் பாதுகாவலர் என்று சொல்லும் தி.மு.க.,வினர், கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியுள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: முந்தைய தி.மு.க., ஆட்சியில், குடியுரிமை சட்டம், வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் சிறைவாசிகளை, தி.மு.க., அரசு விடுதலை செய்தது. தி.மு.க., - எ.வ.வேலு: தமிழகத்தைப் பொருத்தவரை, முஸ்லிம்கள் பிரச்னை என்பது உணர்வுப்பூர்வமானது. முஸ்லிம்களுக்கு பாதுகாவலனாக இருந்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கட்சி தி.மு.க.,தான். எனவே, எங்களை கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. தி.மு.க., - கோவி.செழியன்: மதம் சம்பந்தப்பட்ட பிரச்னையை பேசும் போது, கவனமாக வார்த்தையை பயன்படுத்த வேண்டும். தி.மு.க., எப்போதும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். தமிமுன் அன்சாரி: சட்டசபையில் வைக்கப்படும் கருத்துகள், சபைக்கு வெளியே சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட காரணமாக இருந்து விடக்கூடாது. உணர்ச்சிகரமான பி ரச்னையில், பொறுப்பில்லாமல் பேசுவதை அனுமதிக்கக் கூடாது. சபாநாயகர் பிரபாகர்: தான் பேசியதற்கு, மதார் பதுருதீன் ஆதாரத்தை என்னிடம் அளித்துள்ளார். சட்டசபையின் மாண்பு, மக்கள் நலன் கருதி, அதை வெளியிடவும் விவாதிக்கவும் விரும்பவில்லை. மதார் பத்ருதீன்: 1999ல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் தான் நான் பேசுகிறேன். சபாநாயகர் பிரபாகர்: மீண்டும், 1999ல் நடந்ததை நினைவுப்படுத்தி, யாரையும் காயப்படுத்த வேண்டாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

கடும் அமளி

மதார் பத்ருதீன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். பதிலுக்கு த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று கோஷமிட்டனர். தி.மு.க., வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர், முன்வரிசைக்கு சென்று, த.வெ.க.,வினருடன் கைகளை நீட்டி, கடும் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 30 நிமிடங்களுக்கு மேலாக, சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அவர்களை, சபாநாயகர் பிரபாகர் அமைதிப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்