பெங்களூரு: 'பாகிஸ்தானுடன் போர் வேண்டாம்' என்று கூறியதால், பா.ஜ.,வின் கடும் எதிர்ப்பை சம்பாதித்த முதல்வர் சித்தராமையா தற்போது அந்தர்பல்டி அடித்து உள்ளார். 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுவது தேசத்துரோகம்' என்று கூறி, தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். ' காஷ்மீரின் பஹல்காமில், 26 சுற்றுலா பயணியரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றதால், பாகிஸ்தான் மீது கடும் கோபம் அடைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரு நாட்டிற்கும் இடையில் போர் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, 'பாகிஸ்தான் மீது போர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; போருக்கு நாங்கள் ஆதரவாகவும் இல்லை' என்று கூறி இருந்தார். சாட்டையடி
அவரது இந்த கருத்தை பாகிஸ்தானில் உள்ள முன்னணி, 'டிவி' நிறுவனமான ஜியோ, தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இதை வைத்து முதல்வரை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். 'சித்தராமையா பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்; அங்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்' என்றும் வார்த்தையால் சாட்டையடி கொடுத்தனர். 'முஸ்லிம்கள் மீதான முதல்வர் அன்பு வெளிப்பட்டு விட்டது. கர்நாடகாவில் வசிக்கும் ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டிய நேரம்' இது என்றும் பா.ஜ., தலைவர்கள் கூறி இருந்தனர். 26 உயிர்கள்
சித்தராமையாவின் இந்த கருத்து, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஹிந்து தலைவர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சில அமைச்சர்கள் பாகிஸ்தான் மீது போர் வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறினர்.இதனால் சுதாரித்து கொண்ட சித்தராமையா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறு தான். இங்கு இருந்து கொண்டு அந்த நாட்டிற்கு ஆதரவாக கோஷம் எழுப்புவது தேசத்துரோகம். கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே போர் செய்ய வேண்டும். போர் ஒரு தீர்வாக இருக்காது என்று தான் கூறினேன். ஆனால் எனது பேச்சை பா.ஜ., தலைவர்கள் திரித்து விட்டனர். கடந்த காலத்தில் புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இதனை ஒரு பாடமாக எடுத்து கொண்டு மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்க வேண்டும். மத்திய உள்துறையின் தோல்வியால் இப்போது 26 உயிர்கள் பறிபோய் உள்ளது. 20 பேர் கைது
இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடாமல் இருக்க பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். அந்த நாட்டிற்கு ஆதரவாக நான் பேசியதாக நடந்து வரும் விவாதங்களை கவனித்தேன். மங்களூரில் கேரள வாலிபரை கொலை செய்த வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த வாலிபர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக குற்றச்சாட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்த பின் தான், வழக்கில் என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும்.பெலகாவியில் நடந்த கூட்டத்தின் போது போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்ததாக, என் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இதுபற்றி நான் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். மீண்டும், மீண்டும் என்னால் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ஒருபக்கம் ஹிந்துக்கள் ஓட்டுகளை கைப்பற்றுவதற்காக, துணை முதல்வர் சிவகுமார் கோவில், கோவிலாக சென்று வரும் நிலையில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று, சித்தராமையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதை போக்கவே பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தேசத்துரோகம் என்று அவர் கூறி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.