ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் நடைபாதையில் விற்றவர் கைது
பெங்களூரு: நடைபாதையில் கஞ்சா விற்க முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுத்தும், பெங்களூரில் போதைப்பொருள் விற்பதை, பயன்படுத்துவதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப்பொருள் விற்பதாக தகவல் வரும் வீடுகள், விடுதி அறைகள் உட்பட பல இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி, கிலோ கணக்கில் போதைப்பொருள், கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில், பெங்களூரின், கே.ஜி.சாலையின் நடைபாதையில் கஞ்சா விற்க முயற்சி நடப்பதாக, நேற்று முன்தினம் ஹலசூர் கேட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார், குஷால், 35, என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, வீட்டிலும் கஞ்சா இருப்பது தெரிந்தது. அங்கு சென்று 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.