பெங்களூரு ஏர்போர்ட்டில் ஹிந்தி அகற்றியதாக வதந்தி பெங்களூரு ஏர்போர்ட்டில் ஹிந்தி அறிவிப்பு அகற்றம்?
பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் டிஜிட்டல் பேனர்களில் கன்னடம், ஆங்கில மொழிகளில் மட்டுமே அறிவிப்பு உள்ளதாக வீடியோ வெளியானது. இதை மறுத்த விமான நிலைய நிர்வாகம், ஆரம்பத்தில் இருந்தே கன்னடம், ஆங்கிலத்தில் தான் உள்ளது என்று விளக்கி உள்ளது.கர்நாடகாவில் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கடந்தாண்டு மாநில அரசு சட்டம் இயற்றியது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்து நடைமுறையில் உள்ளது. இதன்படி, நிறுவனங்கள் பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னட மொழியும், 40 சதவீதம் மற்ற மொழிகளும் இடம் பெற்றுள்ளன.நாட்டிலேயே அதிக பயணியர் வந்து செல்லும் விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் டிஜிட்டல் பெயர் பலகைகளில், ஹிந்தி மொழி அகற்றப்பட்டதாக 'எக்ஸ்' வலைதளத்தில் தகவல்கள் பரவியது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வெளியாகி உள்ளது. எதிர்ப்பு தெரிவித்த சிலர், 'மாநிலத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி இல்லாததை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், விமான நிலையத்திற்கு ஆங்கிலம், கன்னடம் மொழி தெரிந்தவர்கள் மட்டும் தான் வருகின்றனரா. எனவே விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஹிந்தி மொழியும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்' என்றனர்.ஆதரவளித்த சிலர், 'புதுடில்லி, லண்டன், நியூயார்க், ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் கன்னடத்தில் தகவல்கள் கிடைக்குமா. எதற்காக கர்நாடக விமான நிலையத்தில் ஆங்கில மொழியை பயன்படுத்த வேண்டும்' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பெங்களூரு விமான நிலைய நிர்வாகம், 'விமானங்கள் வருகை, புறப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே கன்னடம், ஆங்கிலத்தில் தான் அறிவிப்புகள் இருக்கின்றன. அதே வேளையில் வழிகாட்டி அறிவிப்பு பலகைகளில் ஹிந்தி மொழி இடம் பெற்றுள்ளது' என தெரிவித்துள்ளது.