ஜமீருக்கு ரூ.3.70 கோடி கடன் கே.ஜி.எப்., பாபுவுக்கு சம்மன்
பெங்களூரு: கர்நாடக வீட்டு வசதித்துறை ஜமீர் அகமது கான் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளதாக, 2019ல் ஊழல் ஒழிப்புப் படையில் வழக்கு பதிவானது. அதன்பின் இந்த வழக்கு, லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டது. அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்துகின்றனர். இவர், தன் பொருளாதார பிரச்னைக்காக, பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இவருக்கு கடன் கொடுத்தவர்கள் பட்டியலின்படி, அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். நடிகை ராதிகா குமாரசாமியிடம் ஜமீர் அகமது கான், 2 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதுகுறித்து, ராதிகா குமாரசாமியிடம் கடந்த வாரம் அதிகாரிகள் விசாரித்தனர். அவரும் கடன் கொடுத்ததையும், அந்த தொகையை எப்படி சம்பாதித்தார் என்பதையும் விவரித்திருந்தார். இப்போது அரசியல் பிரமுகர் கே.ஜி.எப்., பாபுவுக்கும், ஜமீர் அகமது கானுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த, 2013ல் ஜமீர் அகமது கான் வீடு வாங்க, கே.ஜி.எப்., பாபு 3.70 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். எனவே பாபுவுக்கு நேற்று சம்மன் அளித்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், ஏழு நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தர விட்டுள்ளனர்.