உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சி.டி.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

சி.டி.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

பெண் அமைச்சரை தகாத வார்த்தையில் திட்டிய விவகாரத்தில் பா.ஜ., - எம்.எல்.சி., யான, சி.டி., ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக சட்டசபையில், பெண் அமைச்சரான லட்சுமி ஹெப்பால்கரை தகாத வார்த்தையால், பா.ஜ., - எம்.எல்.சி.,யான சி.டி. ரவி திட்டியது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்த்து ரவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'சட்டசபைக்குள் ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. 'குற்றத்தை செய்தது எம்.எல்.சி., என்பதற்காக சிறப்பு உரிமை எதுவும் அவருக்கு வழங்க முடியாது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரவி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், ''இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் சில விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. ''மேலும், வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,'' என கோரிக்கை வைத்தார்.இதையடுத்து, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், ரவியை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !