வாகன அபராத தொகை ரூ.4.18 கோடி வசூல்
பெங்களூரு: பெங்களூரில் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்துவதற்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலே 4.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர். பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில், 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என மாநில போக்குவரத்து துறையின் இணை செயலர் புஷ்பா கடந்த 20ம் தேதி அறிவித்தார். நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை அபராத தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. இது பிப்ரவரி 11, 2023க்கு முன்னாள், விதிக்கப்பட்ட அபராதத்துக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், முதல் நாளான நேற்று முன்தினம் வசூலான தொகை குறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: வாகனங்களின் மீதான அபராதத்துக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பலரும் பி.டி.பி., அஸ்ட்ரம் செயலி வழியாகவும் கர்நாடகா ஒன், பெங்களூரு ஒன் இணையதளம் வழியாகவும் அபராத தொகையை செலுத்தி உள்ளனர். ஆக., 23 அன்று மட்டும் 1,48,747 வழக்குகளுக்கான அபராத தொகை செலுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், 4.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. வாகன ஓட்டிகள் அரிய வாய்பை பயன்படுத்தி கொண்டு, தங்கள் வாகனங்கள் மீதுள்ள அபாரத தொகையை செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.