உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மழை பெய்யும் போது வாகன பயணியர் பின்பற்ற வேண்டியது என்னென்ன?

 மழை பெய்யும் போது வாகன பயணியர் பின்பற்ற வேண்டியது என்னென்ன?

பெங்களூரு: பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன், ஆலங்கட்டி மழை பெய்து பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தியது. வாகன பயணியர், சாலை நடுவில் சிக்கி திணறினர். இதையடுத்து, மழை பெய்யும் போது பின்பற்றும்படி போக்குவரத்து போலீசார், ஆலோசனைகள் வெளியிட்டுள்ளனர். பெங்களூரு போக்குவரத்து போலீசார், வெளியிட்ட அறிக்கை: கன மழை பெய்யும் போது, நகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக மாறுகின்றன. இப்பாதையில் செல்லும் வாகன பயணியர், நிதானமாக செல்வது நல்லது. இதற்காக போக்குவரத்து போலீசார் கூறிய ஆலோசனைகளை பின் பற்றுங்கள். அதாவது:  மழை நீர் தேங்கும் இடங்களில், எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுங்கள்  கனமழை பெய்யும் போது, தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள்  மழை பெய்யும் போது நனையாமல் இருக்க, மரத்தடியில் நிற்காதீர்கள்  சுரங்கப்பாதையில் நிற்காதீர்கள். இங்கு நின்றால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்  செல்ல வேண்டிய இடத்தை பற்றி, தெளிவாக தீர்மானம் செய்து கொண்டு, அதன்பின் புறப்படுவது நல்லது  மழை பெய்யும் போது, வாகனத்தை நிதானமாகவும், மற்ற வாகனங்களில் இருந்து இடைவெளி விட்டு ஓட்டுங்கள்.  ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டும் போது, திடீர் பிரேக் போடாதீர்கள்  முடிந்த வரை நீர் தேங்கும் சாலைகளை தவிர்த்து, மாற்று சாலைகளை பயன்படுத்துங்கள்  ஜங்ஷன்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களில் வாகனத்தில் செல்லும் போது, மிகுந்த கவனத்துடன் இருங்கள்  பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் கூறும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்றுங்கள். இவ்வாறு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !