கார் தீயில் வாலிபர் உடல் கருகி பலி
சித்ரதுர்கா : திடீரென தீப்பிடித்து கார் எரிந்ததில் அதை ஓட்டிச் சென்றவர் உடல் கருகி பலியானார். சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகா அரலிகேட் கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ்வர், 35. இவர், நேற்று 'டாடா நெக்சான்' காரில், சாம்ராஜ்நகரிலிருந்து தன் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அரலிகேட் கிராமத்திற்குள் கார் வந்து கொண்டிருந்தபோது, கார் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிய துவங்கியது. காரில் இருந்த சித்தேஸ்வர் தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட டி.எஸ்.பி., சிவகுமார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ஐமங்கலா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.